உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான சீனா மற்றும் ஐரோப்பியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் முதலீட்டுச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் இதன் எதிரொலி மிகவும் மோசமான நிலையைப் பதிவு செய்துள்ளது.
இதோடு அமெரிக்காவில் ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டம் அமல்படுத்த உள்ளது. இது இரண்டும் சர்வதேச பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 549.49 புள்ளிகள் சரிந்து சுமார் 1.11% சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிப்டி குறியீடு 161.90 புள்ளிகள் சரிந்து சுமார் 1.11% சரிவைப் பதிவு செய்துள்ளது. இதோடு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாகச் சென்செக்ஸ் 860 புள்ளிகளும், நிஃபடி 260 புள்ளிகளும் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 26 நிறுவனங்கள் இன்று சரிவை எதிர்கொண்டுள்ளது. இதில் அதிகப்படியாக டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக், ஹெச்டிஎப்சி ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
2020ல் அதிக லாபத்தை அள்ளிக்கொடுத்த ஐடி நிறுவனங்கள் இன்று லாப நோக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் இன்று டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் பங்குகள் அதிகச் சரிவைப் பதிவு செய்தது.
இதேவேளையால் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 28 மாத உயர்வையும், பார்தி ஏர்டெல் 4 சதவீத உயர்வையும், வோடபோன் 10 சதவீத உயர்வையும் பதிவு செய்துள்ளது. மேலும் கெயில் நிறுவனம் பைபேக் திட்டத்தை அறிவித்தும் 5 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.