உலக நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணப் புழக்கத்தை அதிகளவில் குறைத்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் ஆசியச் சந்தைகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,000 புள்ளிகளைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 61,159 புள்ளிகள் வரையில் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ப்ளூ சிப் பங்குகள்
இந்திய சந்தையில் பங்கு முதலீட்டாளர்கள் எப்போதும் போல் இல்லாமல் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதேநேரத்தில் முதலீட்டாளர்கள் அதிக லாபத்தைப் பெறுவதை விடவும் நிலையான லாபம் பெற வேண்டும் என்பதற்காக ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
முக்கிய நிறுவனங்கள்
இதன் வாயிலாகப் பெரும்பாலான ப்ளூசிப் பங்குகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி சந்தையில் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, இந்தியன் ஆயில், ஐடிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹிண்டால்கோ, ஸ்ரீசிமெண்ட் ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் விப்ரோ நிறுவனம் இன்று 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் இதர ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் ஈவுத்தொகை அறிவிப்பு சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாணய கொள்கை
கொரோனா தொற்றுக் காரணமாக உலக நாடுகள் தங்களது நாணய கொள்கையில் அதிகளவிலான தளர்வுகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது நாணய கொள்கை தளர்வுகளைக் குறைக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நாணய கொள்கை தளர்வுகளைக் குறைத்துள்ள நிலையில் வியாழக்கிழமை இப்பட்டியலில் சிங்கப்பூர்-ம் இணைய உள்ளது.
அமெரிக்கா பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் நினைத்ததை விடவும் அதிகமாக இருந்த காரணத்தால் நவம்பர் மாதம் முதல் பத்திர கொள்முதலை நிறுத்தவும், நாணய கொள்கை தளர்வுகளை அறிவிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எப்போது வட்டி உயர்த்தப்படும் என்பதில் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதுவரையில் பங்குச்சந்தை முதலீடுகள் சிறப்பாக இருக்கும்.