2020ல் பல ஏற்ற இறக்கம் இருந்தாலும் வருடத்தின் முடிவில் சுமார் 15 சதவீதம் வளர்ச்சியைச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பதிவு செய்துள்ளது.இந்நிலையில் புது வருடத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவங்கும் போதே சிறப்பான வளர்ச்சியுடன் துவங்கியுள்ளது.
அமெரிக்கா பங்குச்சந்தையில் ஏற்பட்ட சிறப்பான முதலீடும், வளர்ச்சியும் ஆசியச் சந்தையில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியச் சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் காலை வர்த்தகத்திலேயே குவியத் துவங்கியுள்ளது.
புதிய உச்சம்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய நிலையில் 47,946.66 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. புத்தாண்டு தினத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது சென்செக்ஸ்.
சென்செக்ஸ் குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் சென்செக்ஸ் 10.30 மணியளவில் 186.84 புள்ளிகள் உயர்வுடன் 47,938.17 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் 48,000 புள்ளிகளைச் சென்செக்ஸ் நிச்சயம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடும் இன்று வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் வர்த்தக வளர்ச்சியை அடைந்து வரும் காரணத்தால் 13,996 புள்ளிகளில் துவங்கிய நிஃப்டி 53.75 புள்ளிகள் உயர்ந்து 14,035.50 புள்ளிகளை அடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் போர்டு உடனான கூட்டணி முறிந்த நிலையிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அதிகப்படியாக 2.35% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மஹிந்திராவை தொடர்ந்து டிசிஎஸ், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎப்சி, ஐடிசி, டெக் மஹிந்திரா ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
52 வார வளர்ச்சி
கடந்த 52 வாரத்தில் சென்செக்ஸ் குறியீடு 2020, மார்ச் 24ஆம் தேதி 25,638.9 புள்ளிகள் சரிவிலிருந்து இன்று 47,954.54 புள்ளிகளை அடைந்துள்ளது. 2020 மார்ச் மாதம் தான் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
ஐபிஓ பங்கு வளர்ச்சி
இன்று ஐபிஓ வெளியீடு மூலம் பட்டியலிடப்படும் Antony Waste Handling நிறுவனம் சுமார் 38 சதலீத ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. ஐபிஓ திட்டத்தில் 315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்நிறுவன பங்குகள் இன்று 36 சதவீத ப்ரிமீயம் விலையில் 436.10 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.