அமெரிக்கச் சந்தையின் பணவீக்கம் அளவுகள் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு முடிவை ஜூன் காலாண்டிற்கும் அதிகமான காலத்திற்கு ஒத்திவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைப் பங்குச்சந்தைக்குத் திருப்பினர்.
கடந்த சில வாரங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெடர்ல் ரிசர்வ் அமைப்பின் முடிவுகளுக்குக் காத்திருந்த நிலையில், தற்போது வட்டி உயர்வில் இருந்து குழப்பம் நீங்கி இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு அதிகரிக்கத் துவங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர துவங்கியது.
தேர்தல்
கர்நாடக தேர்தல் பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது முதலீடுகள் அதிகரித்துள்ளது, இதன் காரணமாகப் பங்குச்சந்தை பாதிக்காது எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் இதுகுறித்து விளக்கமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 289.52 புள்ளிகள் உயர்ந்து 35,535.79 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 89.95 புள்ளிகள் உயர்ந்து 10,806.50 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல் 6.44 சதவீதம் வரையில் சரிந்து இந்நிறுவன முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் பாதித்தது. இதைத் தொடர்ந்து சன் பார்மா 5.05 சதவீதம் வரையில் சரிந்தது.
மேலும் ஏசியன் பெயின்ட்ஸ் 6.17 சதவீதமும், டாடா ஸ்டீல் 2.17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்ததுள்ளது.