மும்பை: சென்செக்ஸ் தன் 38,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, பட்ஜெட்டுக்குப் பின் இது ஐந்தாவது முறை. கடந்த மே 20, 2019 முதல் ஜூலை 08, 2019 வரைக்குமான சென்செக்ஸ் டே சார்ட்டில், ஒரு டபுள் டாப் மற்றும் ட்ரிபிள் பாட்டம் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இந்த டபுள் டாப்பு புள்ளிகள் மாறுபட்டாலும், ட்ரிபிள் பாட்டம் புள்ளிகளில் இரண்டு புள்ளிகள் 38.700 புள்ளிகளில் வந்து அமர்கின்றன. எனவே 38,700 வலுவான ரெசிஸ்டென்ஸாக அமைகிறது.
டபுள் டாப்பிள் ஒரு டாப் 40,267 என்கிற வரலாற்று உச்சமாகவும், மற்றொரு டாப் 39,990 என்கிற புள்ளியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான வித்தியாசம் 277 புள்ளிகளாக இருக்கின்றன. கடந்த ஜூலை 08, 2019-க்குப் பிறகு சந்தை கொஞ்சம் இழுத்துப் பிடித்து வர்த்தகமானாலும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. ஜூலை 17, 2019 அன்று சென்செக்ஸ் 39,200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது, அதற்கு மேல் சென்செக்ஸால் மேலே செல்ல முடியவில்லை.
மே 17, 2019 அடுத்த இரண்டே வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் தன் ஜூலை 08, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்த 38,700 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே சரிந்து விட்டது. ஆக 38,700 என்கிற வலுவான சப்போர்ட் உடைந்திருப்பதால், சரிவு உறுதியாகி இருக்கிறது. இந்த சரிவைக் கணக்கில் மேலே சொன்ன இரண்டாவது டாப் புள்ளியான 39,990 புள்ளிகளில் இருந்து 38,700 என்கிற வலுவான சப்போர்ட்டைக் கழித்தால் 1,290 புள்ளிகள் வருகின்றன. ஆக 37,410 தான் நமக்கு அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் என சார்ட் சொல்கிறது. அதோடு 37,410 உடைபடும் பட்சத்தில் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கலாம்.
அப்படி ஒருவேளை சந்தை இந்த இறக்கப் பாதையில் இருந்து ஏற்றப் பாதைக்குப் போக வேண்டும் என்றால், நல்ல வலுவான செய்திகள் வெளிவர வேண்டும். சந்தையை உற்சாகப்படுத்தும் ரீதியில், சந்தையில் ஒரு நல்ல மொமெண்டத்தை வைத்திருக்கும் ரீதியில் அந்த செய்தி அமைய வேண்டும். அப்படி ஒரு செய்தி இப்போது வருமோ..? என்கிற கேள்விக்கு இப்போது வரை நம்மிடம் பதில் இல்லை.
இன்று காலை சென்செக்ஸ் 38,043 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,686 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியை விட 196 புள்ளிகள் கூடுதல் இறக்கம். அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,307 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,189 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 95 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 43 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,597 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 803 பங்குகள் ஏற்றத்திலும், 1,662 பங்குகள் இறக்கத்திலும், 132 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,597 பங்குகளில் 26 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 405 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி துறை மட்டுமே கொஞ்சம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார் பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல், மீடியா, மெட்டல் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், மாருதி சுஸிகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. ஐசிஐசிஐ பேங்க், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இந்தியா புல்ஸ் ஹவுசிங், க்ராசிம், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, பார்தி இன்ஃப்ராடெல் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.