வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 196 புள்ளிகள் உயர்வுடன் 50000 புள்ளிகளைத் தாண்டி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிய துவங்கியது.
மேலும் இன்றைய வர்த்தகம் துவங்கி முதல் ஒரு மணிநேரத்தில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஆட்டோமொபைல், உலோக நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல், உலோக நிறுவனப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர். கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டு முழுவதும் அனைத்து மாநிலங்களும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் வர்த்தகம் சந்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று
இதேபோல் பெரு நிறுவனங்கள் ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் இருப்பதால் தாங்களாகவே தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் உற்பத்தி அளவீடு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது என்றால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான்.
ஆட்டோமொபைல் சந்தை
இதன் வாயிலாகவே இன்று முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆட்டோமொபைல், உலோக பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் ஆட்டோமொபைல் சந்தை இந்தச் சரிவிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலே முதலீட்டாளர்கள் இத்துறை பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு
இந்நிலையில் காலை 10 மணியளவில் தள்ளாடி வந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 35.81 புள்ளிகள் உயர்ந்து 49,930.05 புள்ளிகளை அடைந்துள்ளது, ஆனால் அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடு சரிவில் இருந்து மீள முடியாமல் தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிஃப்டி 21.85 புள்ளிகள் சரிவில் 15,008.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ONGC, சன்பார்மா, நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் டைட்டன், மஹிந்திரா, இண்டஸ்இந்த், எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை எதிர்கொண்டு வருகிறது.