மத்திய அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் யூரியாவிற்கான மானியத்தைத் தொடர்ந்து அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் இன்றைய வர்த்தகத்தில் விவசாய உரம் சார்ந்த நிறுவனங்களின் மீதான முதலீடு அதிகமாக இருந்தது.
இதனுடன் கடந்த இரு நாட்களாக வங்கித் துறையில் ஏற்பட்ட கணிசமான உயர்வு இன்றைய வர்த்தகத்தில் காணாமல் போனது, இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது.
வங்கித்துறை பங்குகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட மோசடி குறித்துத் தினசரி வெளிவரும் புதுப்புது செய்திகள் அதன் அதிர்வுகளைக் குறைக்காமல் தொடர்ந்து வங்கித்துறை முதலீட்டாளர்களை அச்சத்திலேயே வைத்துள்ளது.
இதன் காரணமாக வங்கித்துறை பங்குகள் மீதான முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஐரோப்பிய சந்தை
இன்று காலை முதல் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே மும்பை பங்குச்சந்தை பதிவு செய்து வந்த நிலையில் ஐரோப்பிய சந்தை துவங்கி பின்பு சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 150.20 புள்ளிகள் வரையில் சரிந்து 33,685.54 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 50.75 புள்ளிகள் குறைந்து 10,360.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.