வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கியது. இதன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஆனால் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் நாள்தோறும் தீவரம் அடைந்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவியது.
இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் சரிவிலேயே இருந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின் கணிசமான உயர்வைச் சந்தித்தது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிப்டி குறியீடு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10,331.60 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.