இந்திய பங்கு சந்தைகள் கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாக சரிவில் இருந்து வருகின்றன. இந்த வார தொடக்கத்தில் புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், அதனை தொடர்ந்து, தற்போது தொடர் சரிவில் உள்ளன.
இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.
எனினும் ஜனவரியில் 8980.81 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 15ம் தேதி வரையில் 23,755.92 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளது. ஆக இது சந்தைக்கு சற்று சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
இதே உள்நாட்டு முதலீடுகள் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தினை காட்டிலும், அதிகளவில் வெளியேறியுள்ளது. ஜனவரியில் 11,970.54 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில், பிப்ரவரியில் 15ம் தேதி வரையில் மட்டும் 15,463.48 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது சந்தை தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், புராபிட் காரணத்தினால் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்?
அமெரிக்க டாலரின் மதிப்பானது, 10 நாட்களில் மிகப்பெரிய சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்க வேலை சந்தை குறித்தான டேட்டா சந்தைக்கு எதிராக வந்த நிலையில் சந்தை சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் வேகமாக குறைந்து வரும் கொரோனா தாக்கம், விரைவில் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை தொடக்கம்
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 55.82 புள்ளிகள் அதிகரித்து, 51,380.51 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.30 புள்ளிகள் அதிகரித்து 15,149.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 222.82 புள்ளிகள் சரிந்து 51,101.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 64.50 புள்ளிகள் சரிந்து 15,054 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 637 பங்குகள் ஏற்றத்திலும், 540 பங்குகள் சரிவிலும், 82 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கெயில், யுபிஎல், ஹெச்யுஎல், அதானி போர்ட்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹீரோமோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்யுஎல், ரிலையன்ஸ், லார்சன், சன் பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 4.12 புள்ளிகள் குறைந்து, 51,320.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 3.90 புள்ளிகள் குறைந்து, 15,115.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதனையடுத்து ரூபாய் மதிப்பு நேற்று 72.65 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி காரணமாக கரன்சி சந்தை விடுமுறையாகும். இனி ரூபாயின் மதிப்பு நிலவரம் திங்கட்கிழமையன்றே எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.