இந்தியாவில் கொரோனா தொற்று, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புப் பாதிப்பு எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் சில சரிவுகள் உடன் தொடர்ந்து வர்த்தக உயர்வைச் சந்தித்து வந்தது.
இதன் எதிரொலியாகவே வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கூட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகமும் சிறப்பாக இருக்கும் என அனைவராலும் நம்பப்பட்ட நிலையில், இன்றைய வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆசிய சந்தையில் தடுமாற்றம்
திங்கட்கிழமை ஆசியச் சந்தையில் பல கலவையான வர்த்தகம் நிலவியது. குறிப்பாக வெள்ளிக்கிழமை சரிவில் முடிந்த ஜப்பான் சந்தை, இன்று 0.35 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. எதிர்பாராத விதமாகத் தென் கொரிய சந்தை சரிவடைந்துள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
இதேபோல் அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் சாதகமாக இருந்த காரணத்தால் அமெரிக்கச் சந்தைகளின் நாஸ்டாக், டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி ஆகியவை வெள்ளிக்கிழமை உயர்வுடன் காணப்பட்ட போதும் ஆசிய சந்தைகள் கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது இந்திய சந்தையைப் பாதித்துள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்
இதன் வாயிலாக வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு அதாவது ஃப்ரீ ஒப்பனிங் வர்த்தகத்தில் கணிசமான சரிவை பதிவு செய்த நிலையில், வர்த்தகம் துவங்கிய பின்பு தடாலடியாகச் சரிந்தது.
சென்செக்ஸ் குறியீடு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 540 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ் குறியீடு தற்போது 189.24 புள்ளிகள் சரிவுடன் 52,275.44 புள்ளிகளை எட்டியுள்ளது. 52,000 புள்ளிகளை இழக்காத சென்செக்ஸ் இன்னமும் வெள்ளிக்கிழமை அளவான 52474 புள்ளிகளை அடையவில்லை.
நிஃப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடு 200 புள்ளிகள் சரிவில் இருந்து 77.15 புள்ளிகள் சரிவுடன் 15,722.20 புள்ளிகளை அடைந்துள்ளது. இதன் மூலம் நிஃப்டி குறியீடு 52,600 புள்ளிகள் என்ற வலிமையான அளவீட்டில் இருந்து இறங்காமல் உள்ளது.
அன்னிய செலாவணி அளவீடு
ஜூன் 4ம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதன் எதிரொலியாக நாட்டின் மொத்த அன்னிய செலாவணி அளவீடு 605 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை அடைந்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டு சந்தை மதிப்பு
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்த நிலையில் மொத்த சந்தை முதலீட்டு மதிப்பு 1.29 லட்சம் கோடி ரூபாய் உயர்வுடன் 231.52 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து புதிய சாதனை படைத்தது வரலாற்று நிகழ்வு.
ரூபாய் மதிப்பு
திங்கட்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.15 ரூபாயாகச் சரிந்துள்ளது. கடந்த வாரம் 72 ரூபாய் அளவீட்டில் இருந்து ரூபாய் மதிப்பு இன்று 73.15 ரூபாய் அளவிற்குச் சரிந்துள்ளது.