இந்திய பங்குச்சந்தை முதல் 2 வாரத்தில் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு, அதிகளவிலான அன்னிய முதலீடு ஆகியவற்றின் காரணமாக சிறப்பான வளர்ச்சியை அடைந்த நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 50000 புள்ளிகள் அளவீட்டை கடந்து 49,617.37 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இன்றைய வர்த்தக சரிவு 2 மாதத்தில் ஏற்பட்ட மோசமான சரிவாக பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அதிகளவிலான பங்குகள் விற்பனை
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 2 வார காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு சந்தைகள்
இன்றைய சரிவுக்கு மந்தமான வெளிநாட்டு வர்த்தக சந்தைகளும் முக்கிய காரணமாக உள்ளது. இன்று ஜப்பான், தைவான் நாடுகள் கணிசமான உயர்வை எதிர்கொண்ட நிலையில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஸ்விஸ் ஆகிய நாடுகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஓன்என்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை மட்டுநே சரிவில் இருந்து தப்பித்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.
3 முதல் 4 சதவீதம் சரிவு
குறிப்பாக இண்டஸ்இந்த், டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது. மேலும் ஹெச்டிஎப்சி, பவர் கிரிட், ஹெச்சிஎல், மாருதி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.
அமெரிக்க பத்திர சந்தை
அமெரிக்க பத்திர சந்தையில் லாப அளவீடுகள் அதிகரித்துள்ளது வெளிநாட்டு சந்தை முதலீட்டில் இருந்து முதலீடுகள் வெளியேற மிகவும் முக்கிய காரணமாக விளங்குகிறது. அமெரிக்க பத்திர முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் அமெரிக்க முதலீட்டாளர்கள் உலக நாடுகளின் பங்குச்சந்தையில் செய்துள்ள முதலீடுளை திரும்ப பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த மாதத்தின் மொத்த அளவான 2000-த்தை விடவும் மிகவும் அதிகமானது என்பதாலும், முதலீட்டு சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 14,199 ஆக உள்ளது.
அதிக பாதிப்பில் மும்பை
மேலும் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை நகரம் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதன் சமிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்க திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சாதகமானதாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
மேலும் கோல்டுமேன் சாச்சீஸ் 2வது மற்றும் 3வது காலாண்டில் பிரென்ட் மற்றும் இதர முக்கிய கச்சா எண்ணெய் விலை 10 டாலர் வரையில் உயரலாம் என கணித்துள்ளது. இதன் காரணமாகவும் ஒரு பகுதி பங்குச்சந்தை முதலீடுகள் கச்சா எண்ணெய் சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் இந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் முன்னிலையில் அமெரிக்கா பொருளாதாரம் குறித்த தரவுகளை முன்னவைக்க உள்ளார். கொள்கை வடிவமைப்பாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்க தேவையான அனைத்து தளர்வுகளையும், சூழ்நிலையும் உருவாக்க தயாராக இருக்கும் நிலையில் நீண்ட கால முதலீடுகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.