அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப் வெற்றி பேச்சுக்குப்பின் முதல் முறையாக மக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். அதுமட்டும் அல்லாமல் அதிபராகப் பதவியேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் இந்தியா மற்றும் ஆசிய சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் வாயிலாக இன்று அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்த காரணத்தால் 27,000 புள்ளிகள் என்ற வலிமையான நிலையை மீண்டும் பெற்றுள்ளது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 240.85 புள்ளிகள் உயர்ந்து 27,140.41 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெற்று 92.05 புள்ளிகளை எட்டி 8,350.65 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.