மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,701 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 38,970 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மே 17, 2019 மாலை சென்செக்ஸ் 37,930-க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே 770 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானது தான் ஆச்சர்யம்.
அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,651 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,715 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மே 17, 2019 மாலை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,407 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே சுமார் 240 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது தான் ஆச்சர்யம்.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 02 பங்குகள் இறக்கத்திலும், 28 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 05 பங்குகள் இறக்கத்திலும், 45 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,452 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,794 பங்குகள் ஏற்றத்திலும், 527 பங்குகள் இறக்கத்திலும், 131 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,452 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 136 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டியில் அனைத்து துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. தற்போது எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், மாருதி சுஸிகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகி வருகின்றன. அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, இந்தியா புல்ஸ் ஹவுசிங், க்ராசிம், யெஸ் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 6.50 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் சுமார் 0.5 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
ஆனந்த் ரதி என்கிற தரகு நிறுவனம் "நேற்று வெளியான தேர்தல் கணிப்புகள் தான் இன்றைய சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் சரி, பாஜக ஆட்சி அமைத்தாலும் சரி, அவ்வளவு ஏன் மாநிலக் கட்சிகளில் ஏதாவது ஒன்று ஆட்சி அமைத்தாலும் சரி, ஆனால் பெரும்பான்மை பலத்துடன், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்றால், பங்குச் சந்தை இப்படி ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 1000 புள்ளிகள் அசால்டாக ஏறத் தான் செய்யும்" என்கிறார்கள். அப்படி என்றால் நம் தலைப்பு சரி தானே ராம ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..! எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..!