மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 300 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும், வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் கணிசமான சரிவை எதிர்கொண்டது.
ஆனால் ஆசியச் சந்தையில் நிலவிய வலிமையான வர்த்தகம் மற்றும் முதலீடு காரணமாக இன்றைய வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே இருந்தது.
சென்செக்ஸ் குறியீடு
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1,243 புள்ளிகள் வரையில் உயர்ந்து 51,539.89 புள்ளிகளை அடைந்தது. காலையில் ஏற்பட்ட சிறு சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து வளர்ச்சியில் இருந்தது மட்டும் அல்லாமல் வர்த்தக முடிவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தான் இன்றைய உச்ச நிலையை அடைந்தது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
இதன் எதிரொலியாகக் காலை முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பரபரப்பாகவே இருந்தனர். மேலும் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,147.76 புள்ளிகள் உயர்ந்து 51,444.65 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மொத்த மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
இதேவேளையில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வங்கி, நிதியியல் சேவை நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தால் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாகப் பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி 3 முதல் 5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 326.50 புள்ளிகள் வரியில் உயர்ந்து 15,245.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இன்று 15,064.40 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கி நிஃப்டி குறியீடு 14,995.80 புள்ளிகள் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.