சர்வதேச சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவினாலும் இந்திய சந்தையில் முதலீட்டு அளவுகள் சிறப்பானதாகவே உள்ளது, குறிப்பாகச் சொல்ல வேண்டுமானாலும் கடந்த மாதம் வெளியேறிய முதலீடுகள் திரும்பச் சந்தைக்குள் வந்துகொண்டு இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக உயர்வான நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் சந்தை போக்கை மாற்றும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டின் மூலம் சந்தை நிலைப்பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலையில் சரிவுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு உயர்வான நிலைக்குச் சென்றது, இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கணிசமான லாபத்தை அடைந்தனர்.
முதலீடுகள்
இன்போசிஸ் நிறுவன காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளால் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மீதான முதலீடுகள் குறைந்து, பங்கு இருப்பும் குறையத் துவங்கியது.
மறுபுறம் ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் நுகர்வோர் சந்தை மீதான முதலீடு அதிகமாக இருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 112.78 புள்ளிகள் உயர்ந்து 34,305.43 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 47.75 புள்ளிகள் உயர்ந்து 10,528.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹீரோமோட்டோ கார்ப், கோட்டாக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.