நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் எண்ணிக்கையானது சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், அது முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.
அதோடு பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பினை விட, நன்றாக வந்து கொண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு சமீபத்திய அறிக்கையின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கையானது 2.62 லட்சமாகவும், பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது 4.22 லட்சமாகவும் அதிகரித்து வருகின்றது. இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது தவிர தடுப்பூசிகளும் போடப்பட்டு வரும் நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 462.60 புள்ளிகள் அதிகரித்து, 50,043.33 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 148.30 புள்ளிகள் அதிகரித்து, 15,071.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், டாடா கன்சியூமர் புராடக்ஸ், பிரிட்டானியா, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல் டாப் லூசராகவும் உள்ளது.
ரூபாய் மதிப்பு
இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி, 73.20 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.21 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 489.80 புள்ளிகள் அதிகரித்து, 50,070.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 152.65 புள்ளிகள் அதிகரித்து, 15,075.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.