பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடி எதிரொலிகளைத் தாண்டி கடந்த சில நாட்களாக நிலையான வர்த்தகத்தைப் பெற்றுவந்த மும்பை பங்குச்சந்தையில் இன்று ஒரு நாளில் மட்டும் 530 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
பல நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த வங்கி பங்குகள் நிதியமைச்சகத்தின் சாதகமான கருத்துக்களால் கணிசமான உயர்வை அடைந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான பங்குகளை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்தனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
அமெரிக்கா மற்றும் சீனா மத்தியில் வெடிக்க உள்ள வர்த்தகப் போரின் காரணமாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இன்று வங்கிப்பங்குகள் உயர்ந்ததை அடுத்து பங்கு இருப்புகளை விற்று வெளியேறினர்.
மேலும் இன்று சர்வதேச சந்தைகளும் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தை
3 வார தொடர் சரிவிற்குப் பின் ஆசிய சந்தையில் இன்று லாபகரமான வர்த்தகத்தில் உள்ளது. இதன் காரணமாகவும் அதிகளவிலான முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேறினர்.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் கணிசமான வர்த்தக உயர்வைச் சந்தித்தது. ஆனால் தொடர் சரிவு பாதையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தை
மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவிலேயே இருந்தாலும் ஐரோப்பிய சந்தை துவங்கியது முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மளமளவெனச் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 429.58 புள்ளிகள் வரையில் சரிந்து 33,317.20 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் இன்று அதிகப்படியாக 530 புள்ளிகள் வரையில் சரிந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 109.60 புள்ளிகள் வரையில் சரிந்து 10,249.25 புள்ளிகளை அடைந்தது.
டாப் 30 நிறுவனங்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீட்டின் டாப் நிறுவனங்கள் பட்டியில் இண்டஸ்இன்ட், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.