ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வால் வங்கி, மெட்டல் மற்றும் ஐடி நிறுவனங்களில் இன்று அதிகளவிலான முதலீடு உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் வாயிலாகக் குவிந்தது. இதனால் இதன் எதிரொலியாக இன்று ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தவும், வர்த்தகச் சந்தையை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்தியது அன்னிய முதலீட்டாளர்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
200 புள்ளிகள் உயர்வு
இதன் மூலம் இன்று காலை வர்த்தகம் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 284.20 புள்ளிகள் உயர்ந்து 35,463.08 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 83.70 புள்ளிகள் உயர்ந்து 10,768.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி 2 சதவீதத்திற்கும் அதிகமாகவும் விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஓஎன்ஜிசி, இன்போசிஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து அசத்தியுள்ளது.
சரிவில் முக்கிய நிறுவனங்கள்
இதனுடன் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோல் இந்தியா, இன்டஸ்இந்த் வங்கி, கோட்டாக் வங்கி, எஸ்பிஐ, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் சரிவை தழுவியது.