நேற்று சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 500 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய பெரிய தயக்கம் காட்டுவதாகவே தெரிந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகமாக தொடங்கியதில் இருந்தே சென்செக்ஸ் நிலையாக 39 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 70 ரூபாய் 92 பைசா கொடுத்தால் வாங்கி விடலாம் என்கிற நிலையில் இருக்கிறது இந்தியா.
அதோடு துறை சார் இண்டெக்ஸ்களில் ஆட்டோமொபைல், வங்கி, எனர்ஜி, எஃப் எம் சி ஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மெட்டல் ஃபார்மா என கிட்டதட்ட அனைத்து பெரிய துறை சார்ந்த பிண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதனால் சென்செக்ஸும் நிஃப்டியும் ஓரளவுக்கு நிலையாக ஏற்றம் கண்டு வருகின்றன.
நேற்று மாலை 38 ஆயிரத்து 676 புள்ளிகளில் நிறைவு அடைந்த சென்செக்ஸ், இன்று காலை 38 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகம் ஆக தொடங்கியது. இந்த சிறிய கேப் அப்புக்கு பிறகு காலை பத்தரை மணி வரை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தது சென்செக்ஸ். அந்த ஏற்றாத்தோடு ஏற்றமாக, சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான உச்சபட்ச புள்ளியான 39 ஆயிரத்து 158 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும் இன்று சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 39 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவு அடையுமா..? எனக் கேட்டால் சந்தேகமே என்கிறார்கள் அனலிஸ்டுகள். இப்போது வரை சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளில் நிலைத்து வர்த்தகமாக போராடிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் நேற்று மாலை 11,440 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சுமாராக 10.30 மணி அளவில் நிஃப்டி 11,610 என்கிற தன் இன்றைய நாளுக்கான உச்சப் புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.