மும்பை: நேற்று சந்தை குறித்து குளோசிங் பெல் கட்டுரையில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி இருந்தோம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போதாது என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் நினைப்பதாகச் சொல்லி இருந்தோம்.
நாம் சொன்ன நேரமோ, இல்லை நிதி அமைச்சரின் கெட்ட நேரமோ, இன்று காலையில் இருந்து சென்செக்ஸ் 37,410 என்கிற சப்போர்ட் புள்ளியை கெட்டியாக பிடித்துக் கொண்டு தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ் நேற்று 37,641 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 37,655 என கொஞ்சம் ஏற்றத்துடன் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் சுமார் 10 மணி அளவில் சென்செக்ஸ் இண்டெக்ஸ் தன் இன்றைய குறைந்த புள்ளிகளான 37,428 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. மீண்டும் சுமார் 11.15 மணி அளவில் சென்செக்ஸ் ஒரு குட்டி ஏற்றம் கண்டு தன் இன்றைய உச்சமான 37,687 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆனது. ஆனால் தற்போது மீண்டும் இறக்கம் கண்டு சுமார் 37,500 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அதே போல நிஃப்டி, தன் நேற்றைய குளோசிங் புள்ளியான 11,105 புள்ளிகளைத் தொட்டு 11,101 புள்ளிகளில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே கொஞ்சம் மேல் நோக்கி வர்த்தகம் ஆகி, சுமார் 9.25 மணி அளவில் தன் இன்றைய உச்சமான 11,129 புள்ளிகளைத் தொட்டது. அதன் பின் மீண்டும் இறக்கம் தான். தற்போது சுமாராக 11,060 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 37,410 புள்ளிகள் உடைந்தால், அடுத்த வலுவான சப்போர்ட் புள்ளியாக இருப்பது 37,000 புள்ளிகள் தான் என்பதை மறக்க வேண்டாம். ஆகையால் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் உஷாராக இன்று வர்த்தகத்தை மேற் கொள்ளவும். குறிப்பாக ஷார்ட் எடுப்பவர்கள் பார்த்து கவனமாக எடுக்கவும்.
இந்திய சந்தைகள் இப்படி இருக்க பெரும்பாலான ஆசிய சந்தைகளும் மந்தமாக வர்த்தகமாகி வருகின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications