அமெரிக்க அதிபர் டொனால்டு டிரிம்ப் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் இன்று உலகளாவிய பங்குச்சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 47,354 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
சென்செக்ஸ் குறியீடு
திங்கட்கிழமை - வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலையில், சென்செக்ஸ் துவங்கிய போதே 160 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி 47,153 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கியது. ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான வர்த்தகச் சூழ்நிலை மற்றும் அமெரிக்காவில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் எதிரொலியாகச் சென்செக்ஸ் சுமார் 380 புள்ளிகள் வரையில் உயர்ந்து புதிய உச்ச அளவான 47,354.71
புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 120 புள்ளிகள் வரையில் உயர்ந்து 13,865.45 புள்ளிகளை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நிஃப்டி மிட்கேப் 50 குறியீடு 1.38 சதவீதமும், நிஃப்டி ஆட்டோ 1,16 சதவீதமும், நிஃப்டி பேங்க் 1.07 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆசிய சந்தை நிலவரம்
அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையின் காரணமாக இன்று ஆசியச் சந்தையில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும், கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது. இதன் படி ஆஸ்திரேலியா 0.36%, ஷாங்காய் 0.10%, ஜப்பான் 0.54%, தைவான் 1.00% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனிடையில் ஹாங்காங் சந்தை மட்டும் 0.03% சரிவைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் டாப் 30 நிறுவனங்கள்
அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது இந்திய வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இன்டஸ்ட்இந்த் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் பின்சர்வ், கோட்டாக் மஹிந்திரா ஆகிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ, மாருதி, மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சரிவில் இருக்கும் நிறுவனங்கள்
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎப்சி, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது.