மும்பை பங்குச்சந்தை வார விடுமுறையைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை காரணமாகத் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பின் இன்று வர்த்தகம் துவங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள சாதகமான சூழ்நிலையில், டாலர் மதிப்பில் ஏற்பட்டு உள்ள உயர்வு , 3 நாள் விடுமுறை, கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு ஆகியவற்றின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது.
இதன் எதிரொலியாக இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1250 புள்ளிகள் வரையில் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வரும் வேளையில் 50000 புள்ளிகளைத் தாண்டி கூட முடியாமல் தடுமாறி வந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டு உள்ள அதிரடி வளர்ச்சி மூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 50,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,128.08 புள்ளிகள் உயர்ந்து 50,139.58 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 337.80 புள்ளிகள் அடைந்து 14,845.10 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் அதிரடி
இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டு மற்றும் வருடாந்திர அறிக்கையில் தாக்கல் செய்ய உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் ஈர்த்துள்ளது.
இன்போசிஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ் அதிரடி உயர்வு
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் 3.69 சதவீதமும், டிசிஎஸ் 2.99 சதவீதமும், ஹெச்சிஎல் 3.91 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.50 சதவீதம் என அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கப் பத்திர சந்தை
மேலும் அமெரிக்கப் பத்திர முதலீடு சந்தையில் கிடைக்கும் லாப அளவீடுகள் மந்தம் அடைந்துள்ள காரணத்தாலும், டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும் இன்று அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்தியச் சந்தையில் குவிந்துள்ளது. முக்கியமாக வங்கித்துறையில் குவிந்துள்ள காரணத்தால் இத்துறை பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
3.5 லட்சம் கோடி ரூபாய்
இன்றைய அதிரடி வளர்ச்சி மூலம் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தச் சாதகமான வர்த்தக வாய்ப்பு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.