மும்பை பங்குச்சந்தை இந்த வாரம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து மந்தமாக இருந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கியதிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் இருந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பங்குசந்தை முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3.20 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 400 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சி உடன் துவங்கிய நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது.
சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு
இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1000 புள்ளிகளுக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து வரலாறு காணாத உயர்வான 59,957.25 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று அதிகப்படியாக 17,670 புள்ளிகளில் இருந்து 17,843.90 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் பங்குகள்
மேலும் மும்பை பங்குச்சந்தையில் இன்று ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் அதிகளவிலான முதலீடு குவிந்த காராணத்தால் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. இதில் குறிப்பாக ரிஸையன்ஸ் பங்குகள் இன்று 2,497 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தனர்.
டாப் 30 நிறுவனங்கள்
இதேபோல் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 5.15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியும், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்ட்ஸ்இந்த், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதவு செய்தது.
இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளது.
முதல் காரணம்..
அமெரிக்காவின் பெடரல் வங்கி வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு மூலம் அமெரிக்க சந்தை மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையிலும் அதிகப்படியான தாக்கக்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதல் திட்டத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு மாதமும் பெடரல் ரிசர்வ் வாங்கும் பத்திர அளவுகளை குறைக்க உள்ளது.
இந்த குறைப்பை டிசம்பர்-க்கு பின்பு கையில் எடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது நவம்பர் மாதம் முதல் பத்திரம் வாங்குவதை குறைக்க முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் திட்டமிட்ட காலக்கட்டத்திற்கு முன்பாகவே தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் மொத்த பங்கு முதலீட்டு சந்தையும் குஷியாகியுள்ளது.
இரண்டாவது காரணம்..
கடந்த 2 நாட்களாக உலக நாடுகளையும், முதலீட்டாளர்களை பயமுறுத்தி வந்த சீனாவின் எவர்கிராண்டே பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ஷோர் பத்திர சந்தையில் கூப்பன் பேமெண்ட் பிர்சனையை தீர்த்துள்ள நிலையில். தற்போது சீனாவின் மிகப்பெரிய அரசு வங்கியான சீன மக்கள் வங்கி 17 பில்லியன் டாலர் அளவிலான தொகையை எவர்கிராண்டே நிருவனத்தில் நிதி உட்செலுத்தியுள்ளது.
இதனால் விரைவில் சீனா, எவர்கிராண்டே நிறுவனத்தை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச முதலீட்டு சந்தைக்கு சாதகமாக மாறியுள்ளது.
மூன்றாவது காரணம்..
மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அறிவித்த PLI திட்டம் மற்றும் டெலிகாம் துறைக்கான தளர்வு திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதேபோல் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக அதிகளவிலான நிறுவனங்கள் முதலீடு செய்யும் காரணத்தால் உற்பத்தில் நிறுவனத்தில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதற்கு உதாரணம் 2021-22 நிதியாண்டின் முதல் 4 மாதம் ஆதாவது ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 20.42 பில்லியன் டாலர் முதலீடுகள் குவிந்துள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் சுமார் 112 சதவீதம் அதிகமாகும்.