வியாழக்கிழமை நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாத கொள்கையில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தாலும், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தைத் தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்கத் திட்டமிட்டுள்ள ரிசர்வ் வங்கி வட்டி விகித்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் இன்று சீனா-அமெரிக்கப் பிரச்சனைகளைத் தாண்டி மும்பை பங்குச்சந்தையில் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி விகிதம் இருக்காது எனக் கணிக்கப்பட்டு வந்த நிலையில், காலை முதலே அதிகளவிலான முதலீடு இந்திய சந்தையில் குவிந்தது.
ரிசர்வ் வங்கியின் இன்றை முடிவுகளும் கணிப்பை போலேவே சாதகமாக இருந்த காரணத்தால் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குச் சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கி முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர முக்கிய உந்து சக்தியாக இருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 577.73 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 196.75 புள்ளிகள் உயர்ந்து 10,325.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ 4.66 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருந்தது. டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.