வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தது. எனினும் இரண்டாவது நாளான இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 40,251 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 39 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,807 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, ஸ்ரீ சிமெண்ட்ஸ், நெஸ்டில், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐஓசி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நெஸ்டில், கோடக் மகேந்திரா, என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ் பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் கோடக் மகேந்திரா வங்கியின் பங்கு விலையானது 5 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வங்கியில் நிகரலாபம் 2,184.5 கோடி ரூபாயாக செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 26.7 சதவீதம் அதிகமாகும். இது நிகர வட்டி வருவாய் 16.8 சதவீதம் அதிகரித்து 3,913.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தவிர சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக, சர்வதேச சந்தைகளும் சரிவிலேயே காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது.