அமெரிக்காவின் வலுவான பொருளாதாரத் தரவுகள் அதிக வட்டி விகிதங்கள் பற்றிய கவலைகளைத் தற்காலிகமாகக் குறைத்தாலும் புதிய வட்டி விகித உயர்வுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதே நேரத்தில் சீனாவில் COVID-19 தொற்று பாதிப்புக்கள் சர்வதேசச் சந்தையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் அச்சம் அதிகரித்துள்ளதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய நிலையில் மதியம் 2 மணி அளவில் 900 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்துள்ளது.
இதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் சீனா கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும் என அந்நாட்டுச் சுகாதார அதிகாரி கூறியுள்ளார், இது உலகம் முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீடு வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கியது முதல் சரிவைப் பதிவு செய்து வரும் நிலையில் அதிகப்படியாக 981 புள்ளிகள சரிந்து 59,845 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் இன்று 60000 அளவீட்டை இழந்தது. டிசம்பர் 1 ஆம் தேதி சென்செக்ஸ் 63583 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இன்று அதிகப்படியாக 59,765.56 புள்ளிகள் சரிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் 4.40 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்தனர். கடந்த 4 நாளில் 11.76 லட்சம் கோடி ரூபாய் சரிந்து மொத்த சந்தை மதிப்பு 287.90 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 276.14 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டைட்டன், கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது, விப்ரோ, எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், எஸ்பிஐ ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு 278.55 புள்ளிகள் சரிந்து 18000 புள்ளிகள் அளவீட்டை இழந்து 17,848 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று நிஃப்டி அதிகப்படியாக 17,830 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
நிஃப்டி-யின் அனைத்துத் துறை சார்ந்த குறியீடுகளும், மிட்கேப், ஸ்மால்கேப், லார்ஜ்கே பங்குகளும் சரிந்துள்ளது.
சென்செக்ஸ் மோசமான சரிவு
கடந்த 4 நாட்களில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 2,900 புள்ளிகள் அல்லது 4.6 சதவீதம் சரிந்துள்ளது.
டிசம்பர் மாதம்
பொதுவாக டிசம்பர் மாதம் கடைசி ஐந்து வர்த்தக நாட்களிலும், ஜனவரி முதல் 2 நாட்களிலும் உலகளவில் பங்குகளின் விலை ஏற்றத்துடனே இருக்கும். ஆனால் தற்போது பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இன்றைய வர்த்தகச் சரிவுக்கு 6 முக்கியக் காரணங்கள் உள்ளது,
அமெரிக்கத் தரவு
அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை, வேலையின்மை கிளைம் மற்றும் செப்டம்பர் காலாண்டின் GDP தரவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது, அதேவேளையில் புதிய வட்டி விகித உயர்வுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா செப்டம்பர் காலாண்டின் முடிவில் அந்நாட்டின் ஜடிபி அளவு 2.9 சதவீதம் உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 3.2 சதவீதம் வரையில் வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதேபோல் வேலையின்மை கோரிக்கைகள் 222,000 வரை மட்டுமே உயர்ந்துள்ளது.
கோவிட் அச்சம்
சீனாவில் கொரோனா தொற்றுப் பரவி வருவதால், கோவிட் தொடர்பான அச்சங்களும் முதலீட்டாளர்களை மீண்டும் பாதிப்பு அடையச் செய்யத் தொடங்கியுள்ளன.
ஜப்பான் பணவீக்கம்
பல்வேறு காரணிகளால் ஆசியச் சந்தை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜப்பான் நாட்டின் நுகர்வோர் பணவீக்க அளவு நவம்பர் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைத் தொட்டு 3.7% ஆக உள்ளது.
நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளை மக்கள் தலையில் விதிக்கும் காரணத்தால் அந்நாட்டில் விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வுகள் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில், டவ் ஜோன்ஸ் 1% க்கும் அதிகமான சரிவையும், நாஸ்டாக் குறியீடு 2.18% சரிந்துள்ளது.
ஆண்டு இறுதி அழுத்தம்
முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டவும், மாதத்திற்கு முன்னதாகப் பணத்தைத் திரட்டவும் விரைவதால் நிஃப்டி குறியீடு அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. நிஃப்டி 18000 புள்ளிகளில் அதிகப்படியான சப்போர்ட் கிடைத்தாலும், இன்றைய சரிவில் 18000 அளவீட்டை இழந்துள்ளது நிஃப்டி.