2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்திய பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் அடுத்தது என்ன என்று அனைத்து தரப்பினரையும் ஏங்க வைக்கும் அளவுக்குத் தற்போது முதலீட்டுச் சந்தையில் சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அனைத்துத் தரப்பில் இருந்தும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக முதலீட்டு சந்தை இந்தப் பட்ஜெட்-ஐ மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது.
இதுதான் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அடுத்த 1.5 வருடத்திற்கு இதன் தாக்கம் சந்தையில் இருக்கும் என்பதால் பங்கு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு கொள்கையை மொத்தமாக மாற்ற வேண்டுமா அல்லது மறுசீரமைப்பு செய்தால் போதுமா எனப் பல கேள்விகளுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கொரோனாவுக்குப் பின்பு பதிவான அதன் உச்ச அளவில் இருந்து பின்வாங்கி வரும் வேளையில், இந்திய சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டினர் அதிகளவிலான பங்குகளை அடுத்தடுத்து விற்பனை செய்து வரும் வேளையில் உள்ளூர் நிறுவன பங்குகள் இக்கட்டான நிலையில் உள்ளது.
மத்திய பட்ஜெட் அறிக்கை
இதற்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையைப் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் வெளியிட சில வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை சரிந்து காணப்படுவது முதலீட்டாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஆசிய சந்தை
கடந்த ஆண்டுப் பெரும்பாலான ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் வட்டி விகிதங்கள் உலகம் முழுவதும் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளாமல் தப்பித்தது.
மும்பை பங்குச் சந்தை
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் 3.4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மும்பை பங்குச் சந்தை ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்நாட்டுச் சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது.
சராசரியாக 1 சதவீதம் சரிவு
2003 ஆம் ஆண்டிலிருந்து ப்ளூம்பெர்க் இந்திய பங்குச்சந்தைகள் குறித்துச் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் பட்ஜெட்டுக்கு முந்தைய மாதத்தில் சராசரியாக 1 சதவீதம் வரையில் இந்திய பங்குச்சந்தை சரிவை பதிவு செய்துள்ளது.
பட்ஜெட்-க்கு முன்
மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய மாதத்தில் பெரும்பாலான நேரத்தில் இந்திய பங்குச்சந்தை சரிவுடனும், அல்லது மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளதை ப்ளூம்பெர்க் இந்திய பங்குச்சந்தைகள் தரவுகள் காட்டுகிறது.
சீன பங்குகள்
ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் ஆய்வாளர் நிதின் சந்துகா கூறுகையில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் சீன பங்குகள் பிற தெற்காசிய நாடுகளின் பங்குகளைக் காட்டிலும் மலிவான விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
5 சதவீதம் சரிவு
டிசம்பர் மாதம் பதிவான வரலாற்று உச்சத்தில் இருந்து ஜனவரி 9ஆம் தேதி வரையிலான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 5% சரிந்துள்ளது. இதோடு இக்காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகள் சுமார் 595 மில்லியன் டாலர் உள்நாட்டு பங்கு சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது.