ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர்..!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை, இன்று திங்கட்கிழமை வர்த்தகத்தில் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை கொடுத்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்ததாலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ள பதற்றமான சூழ்நிலை அதிகரித்ததாலும் உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. இதை தொடர்ந்து இந்திய சந்தையும் 3 சதவீதம் வரையில் சரிவு என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக பிஎஸ்சியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை ஒப்பிடுகையில் சுமார் ரூ.457 லட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ.442 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இன்றைய சரிவுக்கு 5 முக்கிய கரணங்கள் உள்ளது

ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர்..!

1. அமெரிக்க மந்தநிலை அச்சம்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜூலை மாத வேலைவாய்ப்பு தரவுகளில் அமெரிக்க வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தின் 4.1 சதவீதத்தில் இருந்து 4.3 சதவிகிதமாக மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் விரைவில் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதத்தில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

பிளூம்பெர்க் செய்தியின்படி, கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர்கள் அடுத்த 12 மாதங்களில் அமெரிக்காவில் மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளனர்.

பொருளாதார மந்த நிலை அச்சத்தின் எதிரொலியாக, இந்த ஆண்டு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிலர் இந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஜேபி மோர்கன் நிபுணர்கள் செப்டம்பரில் 50 அடிப்படை புள்ளிகளையும் மற்றும் நவம்பரில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைப்பு வரலாம் என்று கணித்துள்ளனர்.

2. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதைத் தொடர்ந்து, ஈரான் பழிவாங்கும் என்று உறுதியளித்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் மாசுட் பெஸ்கியானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஈரானுக்கு வந்த போது ஹனியே கொல்லப்பட்டார்.

இதனால் இஸ்ரேல்- ஈரான் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை போர் அச்சத்தை அதிகரித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்கா தனது ராணுவத்தை இப்பகுதியில் வலுப்படுத்தி வருகிறது.

3. அதீத மதிப்பீடு: இந்திய பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் தற்போது அதிகப்படியான மதிப்பீட்டில் உள்ளது. இதனால் பங்குச்சந்தை ஒரு ஆரோக்கியமான கரெக்ஷனுக்கு நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், இன்று பதிவாகியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியச் சந்தையில் தொடர்ச்சியாக அதிகப்படியான பணப்புழக்கம் இருந்த காரணத்தால் பங்குகளின் மதிப்பீடு பெரிய அளவில் உயர்ந்துள்ளது, குறிப்பாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பிரிவுகளில் இருக்கும் நிறுவனப் பங்குகள் அதிகப்படியான அளவில் உள்ளன. இதில் முக்கியமாகப் பாதுகாப்பு மற்றும் ரயில்வே போன்ற துறையின் பங்குகள் அதிக மதிப்பிடப்பட்ட பிரிவுகளில் இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டு வரும் கரெக்ஷனில் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2 வருடத்தில் பங்குச்சந்தை தொடர் வளர்ச்சியிலிருந்த வேளையில், முதலீட்டாளர்களுக்கு Buy on Dips உத்தி பெரிய அளவில் பயன் அளித்தது, ஆனால் இப்போது இந்த ஐடியாலஜி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். எனவே முதலீட்டாளர்கள் இந்த கரெக்ஷனில் அவசர அவசரமாக புதிய பங்குகளை வாங்க வேண்டியதில்லை. சந்தை நிலைபெறும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி இயக்குனர் வி.கே. விஜயகுமார் கூறினார்.

4. ஏமாற்றம் அளிக்கும் முதல் காலாண்டு முடிவுகள்: இந்திய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு (Q1FY25) முடிவுகள் கலவையாக இருந்த காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தூண்டுவதற்கான காரணியாக இல்லை. தற்போதைய சந்தை மதிப்பீடு அதிகமாக இருப்பதால், நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய், லாபம், வளர்ச்சி விகிதம் ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் பெரும் முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்க துவங்கியுள்ளனர்.

5. தொழில்நுட்ப காரணி: நிஃப்டி 50 குறியீடு, 20-நாள் சராசரியை விட கீழே வீழ்ச்சியடைந்தது, இது பலவீனமான பங்குச்சந்தை முதலீட்டு நிலையைக் குறிக்கிறது. சில நிபுணர்கள், நிப்டி 50 குறியீடு 24,400-க்கு மேல் மூடினால் சந்தை மீண்டு வரலாம் என்று நம்புகின்றனர். இல்லையெனில் மோசமான கரெக்ஷனை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+