வாரத்தின் கடைசி நாளான இன்று ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையைக் கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தை இன்று காலை துவங்கும் போதே மந்தமான நிலையில் தான் துவங்கியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தடுமாற்றம் அடைந்து, ஐரோப்பியச் சந்தையின் மூலம் உயர்வுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையைக் கூட்டத்தின் முடிவுகள் எதிரொலியாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
சென்செக்ஸ்
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கினாலும் 9.15க்கு பின்பு கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு 54.96 புள்ளிகள் உயர்ந்து 54,547.80 புள்ளிகளை எட்டியுள்ளது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் ஐடி துறை பங்குகள் இன்று அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடும் இன்று தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளது. நிஃப்டி குறியீடு அமெரிக்கா ஆசியச் சந்தைகள் சாதகமாக இருந்த வேளையிலும் 29.25 புள்ளிகள் உயர்வுடன் 16,323.85 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்சிஎல், இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடிசி, ரிலையன்ஸ், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களும் சரிவைத் தழுவியுள்ளது.
இதேவேளையில் வங்கித்துறை பங்குகள் இன்று சரிவில் இருந்து தப்பித்துள்ளது.
சர்வதேச சந்தை
அமெரிக்கச் சந்தையின் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக், டாவ் ஜோன்ஸ் ஆகிய குறியீடுகள் அனைத்தும் உயர்வுடனே முடிவடைந்தது. இதன் வாயிலாக ஆசியச் சந்தையும் உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
ஜப்பான் தடுமாற்றத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சீனா, ஹாங்காங், தைவான் ஆகிய சந்தைகள் சரிவுடன் உள்ளது. இது இந்தியச் சந்தையையும் பாதித்துள்ளது.
ஆர்பிஐ இருமாத நாணய கொள்கை கூட்ட
ரிசர்வ் வங்கி இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று அதாவது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தக் கூட்டத்தில் பணவீக்கம் குறித்த கணிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்
கொரோனா 2வது அலை பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில், வளர்ச்சி அளவை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 2வது தொற்று அலை
கொரோனா 2வது தொற்று அலைக்குப் பின்பு உற்பத்தியாளர்கள் தங்களது வர்த்தகப் பாதிப்பு மற்றும் நஷ்டத்தின் அளவுகளைப் பொருட்கள் மீது திணிக்கும் காரணத்தால் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்களில் இருந்து கார், பைக் வரையில் அனைத்தும் அடங்கும்.
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை
நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோர் சந்தை வர்த்தகம் குறைந்து அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாகச் சந்தையில் டிமாண்ட் குறைவது மட்டும் அல்லாமல் நாட்டின் பணவீக்கமும் படிப்படியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ள இந்த வேளையில் பணவீக்கம் என்பது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை.