பென்னி பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அவற்றிலும் நல்ல பங்குகளை தேர்தெடுத்து வாங்கினால் லாபகரமாக இருக்கலாம், என்பது இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது.
சிறந்த நிறுவனங்கள் கூட சில சமயங்களில் மிக குறைந்த விலைக்கு செல்லலாம். ஆக அந்த அந்த சமயத்தில் முதலீடு செய்தால், அது லாபகரமானதாக மாறக்கூடும்.
எனினும் இதுபோன்ற பென்னி பங்குகளை தேர்தெடுக்கும்போது மிக கவனமுடன் இருக்க வேண்டும். பொதுவாக பென்னி பங்குகள் மிக குறைந்த அளவில் இருப்பதால், அவற்றை வாங்குவது மிக எளிது. குறைந்த முதலீடு போதும். வளர்ச்சி கண்ட பெரிய நிறுவனங்களின் ஓரிரண்டு பங்குகளை வாங்குவதை காட்டிலும் இதில் நூற்றுக்கணக்கான பங்குகளை வாங்க முடியும்.
என்னென்ன பங்குகள்
எக்யூப் சோஷியல் இம்பாக்ட் டெக்னாலஜி லிமிடெட் (Equippp Social Impact Technologies Ltd), ரகுவீர் சிந்தெடிக்ஸ், ராதே டெவலப்பர்ஸ், ஜிண்டால் பாலி இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், டாடா டெலிசர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களை பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கடும் சரிவு
கடந்த ஆண்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பங்கு சந்தைகள் பலமான சரிவினைக் கண்டன. அதன் பிறகு ஏற்றம் காண ஆரம்பித்த சந்தையானது இன்று வரையில் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டன.
எக்யூப் சோஷியல் இம்பாக்ட் டெக்னாலஜி
எக்யூப் சோஷியல் இது என்.ஜி.ஓ-க்கள், தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு நிறுவனமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் பட்டியலிடப்பட்டன. இதற்கு முன்பு இந்த பங்கு விலையானது proseed India என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் திவால் ஆன நிலையில் அதன் நிறுவனத்தையும், வணிக மாதிரியையும் மாற்றியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 0.35 ரூபாயாக வர்த்தகம் ஆன ஒரு பங்கின் விலை, தற்போது 93.15 ரூபாயாக காணப்படுகின்றது. இது 2800% ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ரகுவீர் சிந்தெடிக்ஸ் நிறுவனம்
ரகுவீர் சிந்தெடிக்ஸ் நிறுவனமானது டெக்ஸ்டைல் துறையை சேர்ந்ததாகும். இது காட்டன், பாலியெஸ்டர் உள்ளிட்ட பல துணிகளை பதப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஆண்டில் 26.1 ரூபாயில் இருந்து, 470 ரூபாயாக அதிகரித்தது. இது 1797% ஏற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராதே டெவலப்பர்ஸ் நிறுவனம்
ராதே டெவலப்பர்ஸ் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இது அகமதாபாத் மற்றும் குஜராத்தில் உள்ளது. இது கடந்த ஆறு மாதத்தில் 10.40 ரூபாயில் இருந்து 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்த ஆறு மாத காலகட்டத்தில் 3,150% ஏற்றம் கண்டுள்ளது. இதே டிசம்பர் 2, 2020 அன்று 9.1 ரூபாயாக இருந்த பங்குகள் தற்போது 309.6 ரூபாயாக அதிகரித்தது. இது 3,298% அதிகரித்துள்ளது.
ஜிண்டால் பாலி இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ்
ஜிண்டால் பாலி இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் ஒரு முக்கிய முதலீட்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கின் விலையானது 14.75 ரூபாயாக இருந்த பங்கு, தற்போது 360 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது 2,469% அதிகரித்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ்
டாடா டெலிசர்வீசஸ் என்பது மும்பையில் உள்ள ஒரு இந்திய தொலைத் தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவை வழங்குனராகும். இது அதன் இரண்டு துணை நிறுவனங்களான டாடா டெலி பிசினஸ் சரிவீசஸ் மற்றும் டாடா டெலி பிராட்பேண்ட் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஆண்டில் 7.37% ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 141.20 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது ஒரு வருடத்தில் 1600% ஏற்றத்தில் காணப்படுகின்றது.