மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்குச் சாதகமாக அறிவிப்புகளை அறிவிக்காத நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேவேளையில் 2020ல் மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்த காரணத்தால் பங்குச்சந்தை முதலீடுகள் மீது விதிக்கப்படும் LTCG வரி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கணிப்புகளுக்கு மாறாக LTCG வரி விதிக்கப்படவில்லை, இதேவேளையில் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் எவ்விதமான புதிய வரியையும் மத்திய அரசு விதிக்கவில்லை.
இதனால் பட்ஜெட் அறிக்கை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2,478 புள்ளிகள் உயர்ந்த நிலையில், இன்றைய வர்த்தகத்திலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மும்பை பங்குசந்தை
மும்பை பங்குசந்தை பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் முன்பும் 6 நாட்களில் சுமார் 3,500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்துத் தனது வலிமையான 50,000 புள்ளிகள் நிலையை விட்டு இறங்கியது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் 6 முறை பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்த வருடமும் சரிவடையும் எனக் கணிப்புகள் நிலவியது.
பட்ஜெட் எதிரொலி
2021 பட்ஜெட் அறிக்கையில் சந்தைக்குச் சாதகமாக அறிவிப்புகள் அதிகமாக இருந்த நிலையில், திங்கட்கிழமை அதிரடிகளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே அதிரடியாகத் துவங்கிய சென்செக்ஸ் அதிகப்படியாக 50,154 புள்ளிகளை அடைந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
இந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,197.11 புள்ளிகள் உயர்வில் 49,797.72 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு நீண்ட காலத்திற்குப் பின் 50,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.
4.19 லட்சம் கோடி ரூபாய்
மேலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு பதிவு செய்த 2.46 சதவீத வளர்ச்சி மும்பை பங்குச்சந்தையின் முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பை சுமார் சுமார் 4.19 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 196.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.