இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான டாடா குழுமம் பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றது. இது உப்பு முதல் விலையுயர்ந்த ஆபரணங்கள், சொகுசு கார்கள் என அனைத்து பிரிவிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் வெற்றிகரமான நிறுவனம் டாடா கெமிக்கல்ஸ்.
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மிட் கேப் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 24,660 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தை மதிப்பினை கொண்டுள்ள வெற்றிகரமான நிறுவனகளில் ஒன்றாகும்.
கெமிக்கல் நிறுவனம்
டாடா கெமிக்கல்ஸ் இரண்டு வகையான வணிகங்களை சிறப்பாக செய்து வருகின்றது. ஒன்று அடிப்படை கெமிக்கல்ஸ் மற்றும் இரண்டாவது ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் என இருவகையாக உள்ளது. இந்த நிறுவனம் ஆசியாவில் மிகப்பெரிய சால்ட்வேர்க்ஸ் நிறுவனமாகும். அதோடு உலகின் மூன்றாவது பெரிய சோடா ஆஷ் நிறுவனமாகும். ஆறாவது பெரிய சோடியம் பைகார்ப்பனேட் தயாரிப்பாளர் ஆகும்.
என்ன செய்கிறது?
இது கண்ணாடி, டிடர்ஜெண்டுகள், மருந்துகள், பிஸ்கட் தயாரித்தல், பேக்கரிகள் மற்றும் பல துறைகளுக்கு தேவையான அடிப்படை வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. செயல்திறன் பொருட்கள், ஊட்டசத்து அறிவியல் மற்றும் வேளாண் அறிவியல் ஆகியவை சிறப்பு கெமிக்கல் பொருட்களாகவும் உள்ளன.
டெக்னிக்கல் நிலவரம்?
இந்த பங்கின் 52 வார உச்ச விலை 1158 ரூபாயாகும். இது கடந்த அக்டோபர் 18, 2021 அன்று தொட்டது, இதன் 52 வார குறைந்தபட்ச விலை 690.30 ரூபாயாகும். இது மே 27, 2021 அன்று தொட்டது. இது தற்போது அதன் 52 வார உச்ச விலையில் இருந்து, 16.46% குறைந்து, 967.30 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. டாடா கெமிக்கல்ஸ் பங்கின் விலையானது 5 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் 20 நாள், 50 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகிறது.
எவ்வளவு ஏற்றம்?
இப்பங்கின் விலையானது கடந்த 5 தினங்களாக தொடந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், 1.08% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த மாதம் 3.25% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே கடந்த 6 மாதத்தில் 7.38% இப்பங்கின் விலையானது ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5.76% ஏற்றத்தினை கண்டுள்ளது.
இலக்கு விலை
நிறுவனம் தொடர்ந்து தனது சோடா ஆஷ் உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பல பொருட்கள் உற்பத்தியானது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இதன் வருவாய் வளர்ச்சியானது, மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என்றும், இதன் இலக்கு விலையினை 1170 ரூபாயாகவும் ஆனந்த ரதி நிர்ணயம் செய்துள்ளது.