பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்று கேள்வி கேட்டால், 10ல் இன்னும் பாதிக்கும் மேற்பட்டோர் வேண்டாம் என்று தான் கூறுகின்றனர்.
ஏனெனில் பங்கு சந்தை என்றாலே சூதாட்டம், நஷ்டம் என்ற கருத்துகள் தான் அதிகம். ஒரு சந்தைக்கு செல்கின்றோம். அங்கு பலரும் பொருளை வாங்க வந்திருக்கலாம். ஆனால் வாங்கும் அனைவரும் நல்ல பொருளையே வாங்குகிறார்களா? என்றால் இல்லை.
ஏனெனில் பலரும் சந்தை முழுக்க சுற்றி விட்டு, எங்கு நல்ல பொருட்கள் கிடைக்கிறது என தெரிந்து கொண்டு, அதன் பின்னர் வாங்குவர். ஆனால் சிலர் பார்த்தவரையில், மற்றவர்கள் கூறியதை வைத்து வாங்குவார்கள். ஆக அவர்களுக்கு அதற்கு தகுந்த பொருட்களே கிடைக்கும்.
வெற்றிக்கான வழிகள்
அதே போலத் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களும், சந்தையில் பலரும் இருக்கலாம். ஆனால் உங்களது தேவை என்ன? அதனை அடைய எது சிறந்த வழி? எந்த பொருள் சிறந்தது, எதில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? என தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.
வாரன் பஃபெட் வரிகள்
இவற்றோடு பங்கு சந்தையின் சந்தையின் தந்தை என அழைக்கப்படும் வாரன் பஃபேட் கூறிய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களை வெற்றி பெற வழிவகுக்கும். நீங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுங்கள். பொறுமையாக இருங்கள், நல்ல நண்பர்களை கூட வைத்துக் கொள்ளுங்கள், நேரத்தை கடைபிடியுங்கள், அறிவினை பெருக்குங்கள், மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள் என பல அம்சங்கள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறார் வாரன்.
பஜாஜ் பைனான்ஸ் பற்றி பார்க்கலாம்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்திய சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், பல நிறுவனங்களின் பங்கு விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பற்றி தான்.
இரு மடங்கு லாபம்
இந்த நிறுவனத்தின் பங்கானது கடந்த ஒரு ஆண்டில் இருமடங்கு லாபத்தினை கொடுத்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஒரு ஆண்டில் 3469.8 ரூபாயில் இருந்து 7676 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 121% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் 53%மும், சென்செக்ஸ் 52% ஏற்றமும் கண்டுள்ளது.
பல மடங்கு லாபம்
இரு மடங்கு லாபத்தினை கொடுத்த இந்த பங்கின் விலையானது ஐந்து ஆண்டுகளில் 595.65% ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 43% ஏற்றம் கண்டுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த பங்கில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்த வடிக்கையாளர்களுக்கு பல மடங்கு லாபத்தினை கொடுத்துள்ளது எனலாம்.
இன்றைய நிலவரம்
கடந்த 10 ஆண்டுகளில் இந்த பங்கின் விலை 12,302% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. குறிப்பாக இன்று மட்டும் இந்த பங்கின் விலையானது 3.5% ஏற்றம் கண்டு 7676 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் சந்தை மூலதனம் 4,55,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?
இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாட்கள் மூவிங் ஆவரேஜூக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதனால் இன்னும் நீண்டகால நோக்கில் இந்த பங்கின் விலையானது இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக MACD, பொலிங்கர் பேண்ட்ஸ், கேஎஸ்டி உள்ளிட்ட குறியீடுகள் இந்த பங்குக்கு சாதகமான குறிகாட்டிகளாக உள்ளன.
லாபம் அதிகரிப்பு
நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான இது, இந்த துறையில் 20.34% பங்கினை வகிக்கிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 1002 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 962 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.