மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ள காரணத்தாலும், அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்ட காரணத்தாலும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2000 புள்ளிகள் வரையில் வீழ்ச்சி அடைந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை செய்யும் முடிவிற்கு முக்கியமான காரணம் பிரிட்டன் நாட்டில் புதிதாகப் பரவி வரும் மியூடெட் கொரோனா வைரஸ் பாதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும் சில நிமிடங்களில் 300 புள்ளிகள் வரையில் சரிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.
சென்செக்ஸ் குறியீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 45,529 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் 10 மணிக்குள் 400 புள்ளிகள் உயர்ந்து 45,938 புள்ளிகளையும், அடுத்த சில நிமிடத்தில் 400 புள்ளிகள் சரிந்து 45,140 புள்ளிகளையும் அடைந்து முதலீட்டாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதன் மூலம் 400 புள்ளிகள் சரிவில் இருந்து மீண்டு வந்த சென்செக்ஸ் குறியீடு தொடர் வர்த்தக உயர்வின் காரணமாக இன்றைய சரிவிலிருந்து மீண்டு 100 புள்ளிகள் அளவிலான சரிவை மட்டுமே எதிர்கொண்டு வருகிறது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடும் 100 புள்ளிகள் உயர்ந்து அடுத்த சில நிமிடத்தில் 200 புள்ளிகள் வரையில் சரிந்தது. 10 மணியளவில் வர்த்தகம் நிலைப்பெற்று 42புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முக்கிய நிறுவனங்கள் வளர்ச்சி
திங்கட்கிழமை சரிவில் இருந்து இன்று ஹெச்சிஎல், டெக் மஹிந்திகா, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து உள்ளது. மேலும் டெலிகாம் துறையில் பார்தி ஏர்டெல், ஆட்டொமொபைல் துறையில் பஜாஜ் ஆட்டோ மின்சாரத் துறையில் பவர்கிரிட், என்டிபிசி போன்ற நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
அமெரிக்கப் பிராந்திய சந்தை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் நிறுவனத்தைத் தவிர அனைத்து சந்தை குறியீடுகளும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் S&P குறியீடு 0.39% , நாஸ்டாக் 0.10%, கனடா 0.24%, பிரேசில் 1.86%, சிலி 1.13%, மெக்சிக்கோ 1.43% சரிவை எதிர்கொண்டுள்ளது.
ஆசிய சந்தை நிலவரம்
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அனைத்து முக்கியமான சந்தைகளும் சரிவை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக ஆஸ்திரேலியா, சீனா, ஹாக்காங், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் 1.2 சதவீதத்தில் இருந்து 0.11 சதவீதம் அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
பங்குச்சந்தை கணிப்பு
சர்வதசே சந்தைகளைப் பார்க்கும்போது இன்றும், நாளையும் மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.