இன்று உலகமே கொரோனாவினால் அரண்டுபோய் உள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் 4,421 பேருக்குக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும் நிலையில், 114 பேர் பலியாகியுள்ளனர்.
இதே சர்வதேச அளவில் 13,48,430 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 74,795 பேர் பலியாகியுள்ளனர்.
சென்செக்ஸ் ஏற்றம்
இப்படி உலகமே கொரோனா கொரோனா என அலறி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தைகள் தட தட வென ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1920 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 29,511 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 554 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,638 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
ரூபாய் மதிப்பு அதிகரிப்பு
இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக 76 ரூபாய்க்கு மேலேயே இருந்து வந்த ரூபாயின் மதிப்பானது, இன்று சற்று அதிகரித்து 75.82 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு புறம் கொரோனாவினால் உலகமே அரண்டு போயுள்ள நிலையில், இந்திய பங்கு சந்தை இப்படி தட தடவென ஏற்றம் கண்டு வருகிறதே ஏன்? வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
ஆசிய சந்தைகள் ஏற்றம்
இந்திய சந்தை மட்டும் அல்ல. ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று காலையில் தொடக்கத்திலேயே பச்சை நிறத்திலேயே காணப்பட்டன. இதற்கு முக்கிய காரணம் சில முக்கிய பகுதிகளை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் சற்று ஏற்றம் கண்டுள்ளன.
சர்வதேச சந்தைகள் பெரும்பாலும் ஏற்றம்
ரிசர்வ் பேங்க் ஆப் ஆஸ்திரேலியா சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அந்த நாட்டின் பங்கு சந்தையானது 2% மேலாக உயர்ந்துள்ளது. இதே போல ஜப்பான் சந்தையும் 2% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதே தென் கொரிய பங்கு சந்தை 1% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இப்படியாக அனைத்து முக்கிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது எனலாம்.
மருந்து பங்குகள் ஏற்றம்
மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், மருந்து தேவைகள் அதிகரிக்கும் என்ற உணர்வினாலேயே, மருந்து சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. அதிலும் தற்போது 24 மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை அரசு நீக்கியுள்ள நிலையில், அது இன்னும் ஏற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளி வந்த நிலையில், அதன் தாக்கமும் இந்திய சந்தையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஹெஸ்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி, இந்தஸ்தங்க் பேங்க், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சாதகமான அறிக்கையினை கொடுத்துள்ள. ஆக இது போன்ற இன்னும் பல காரணங்கள் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளன.