சர்வதேச சந்தையிலும் இந்தியாவிலும் தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது . இதனால் தங்கத்தை போலவே வெள்ளியும் எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது .
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது . சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் விலை உயர்ந்து 96,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 22 கேரட் ஆபரண தங்கம் 10 கிராமின் விலை 1,20, 500 ரூபாயாக இருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை சென்னையில் இன்று ஒரு கிராம் 13,146 ரூபாய்க்கும். 10 கிராம் 1, 31,460 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 209 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,09,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறையாகும். வெள்ளியின் விலை பொருத்தவரை செவ்வாய் ,புதன் ,வியாழன் இந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 11 ரூபாயும் ஒரு கிலோவிற்கு 11 ஆயிரம் ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
வெள்ளியின் விலை இப்படி தடாலடியாக உயர்ந்து வருவது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாக அக்டோபர் 15ஆம் தேதி சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது அதன் பின்னர் சரிவடைந்து வந்து தற்போது மீண்டும் வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது .

இன்று வரலாற்றிலேயே இல்லாத அளவாக ஒரு கிராம் 209 ரூபாய் என்ற விலையை எட்டிவிட்டது . டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரையிலான இந்த 11 நாட்களில் வெள்ளியின் விலை 13 ரூபாய் உயர்ந்து இருக்கிறது . தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்வதால் வெள்ளி பொருட்களும் தங்களுக்கு எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டிருக்கிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வெள்ளியின் விலை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,30,575 ரூபாய் என்ற விலையை எட்டியது . இது நேற்றைய விட 0.60% அதிகம். அதுவே எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் மார்ச் மாதத்திற்கான ஒரு கிலோ வெள்ளிக்கான சில்வர் கான்ட்ராக்ட்டின் மதிப்பு 1, 93,452 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது . இது நேற்றைய விட 2.4% அதிகமாகும் .அமெரிக்க மத்திய வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது.
வழக்கமாக தங்கம் தான் அதிகமாக விலை உயரும் ஆனால் இந்த முறை தங்கத்தை மிஞ்சி வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. தொழில்துறை ரீதியாக வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதும் , தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் அதற்கு மாற்றாக பலரும் வெள்ளியில் முதலீடு செய்வதும் அதற்கு நிகராக வெள்ளிக்கு தட்டுப்பாடு இருப்பதுமே இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம்.சர்வதேச சந்தையிகும் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 61. 90 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications