சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவிலும் தங்கத்தில் விலை ஒரு நிலையில் இல்லாமல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
தற்போது பண்டிகை மற்றும் திருமண சீஸன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது. எனவே தங்கம் விலை நேற்று ரூ. 24 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ. 256 குறைந்ததால், ரூ. 23,648 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
நேற்று ஒரு கிராம் ரூ. 2956-க்கு விற்ற தங்கம் கிராமுக்கு ரூ. 66 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 3022 க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ. 528 அதிகரித்துள்ளதால் சென்னை நகைக்கடைகளில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது.
இந்த சீசனில் இன்றுதான் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. .
தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்தது. இன்று பார் சில்வர் ரூ. 2735 உயர்ந்து ரூ. 64,505 ஆக இருந்தது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 69 ஆக விற்பனையாகிறது.