மும்பை: 6 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை தரக் கோரி இன்று முதல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடுமையான நிதிநெருக்கடியுடன் இயங்கி வருகிறது கிங்பிஷர் விமான நிறுவனம். இதனால் மிகக்குறைந்த அளவிலேயே இந்த நிறுவன விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானிகளின் எச்சரிக்கை நிறுவனத்துக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் பலர் புதன்கிழமை முதல் பணிக்கு வரவில்லை. சம்பளம் வழங்கப்படாததே இதற்கும் காரணம் என்று தெரிகிறது.
இதற்கு முன்பு கிங்பிஷர் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்போது அனைத்து விமானிகளும் ஒட்டுமொத்தமாக பணிக்குச் செல்லாமல் இருந்தது இல்லை. இப்போது டெல்லி, மும்பையில் உள்ள அந்நிறுவனத்தின் விமானிகள் அனைவரும் கூட்டாக ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.