பணத்தை தொகுப்பாக்கும் திட்டத்தின் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த சாரதா குழு முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
"இந்த குழு (ஐஎம்ஜி) நிதித் துறையில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைகளை அமல்படுத்தும் பொருட்டு எற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயர் மட்ட குழு நிதி சேவைகள் அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் தலைமையில் செயல்படும். அதில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் பிரதிநிதிகள் இருப்பார்கள். "பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டத்தை வரும் 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது," என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐஎம்ஜி மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் (எம் எல் எம்), வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை சரியாக அமலாக்குவதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை, வருவாய் துறை, நிறுவன விவகார அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் செபியில் இருந்து கூட்டு செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் இடம் பெறுவார்கள். பல நிறுவனங்கள் தங்களை சீட்டு நிதி நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு, அதிக வருமானத்தை வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி முதலீட்டாளர்களுக்கு மோசடி திட்டங்கள் அல்லது போன்சி திட்டங்களையே வழங்குகின்றனர்.
போன்சி திட்டம் என்பது முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை தருவதாக பொய்யான வாக்குறுதிகளை தந்து அவர்களிடம் இருந்து அதிக முதலீட்டை பெறும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த திட்டத்தில் புதிதாக சேரும் முதலீட்டாளர்களின் முதலீட்டில் இருந்து பழைய முதலீட்டாளர்களின் பணம் திரும்பத் தரப்படும். ஆகவே இந்த மோசடி திட்டம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
இந்த திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்களுக்கு புதிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, அதிக கமிஷன் கிடைக்கின்றது. மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவை அடங்கிய ஒரு கூட்டு நிறுவனம், போன்சி திட்டங்ளை வழங்கும் நிறுவனங்கள் என சந்தேகிக்கப்படும் நிறுவனங்களை பற்றி ஒர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. மேலும், அமலாக்க இயக்குனரகம் சாரதா குழுமம் மற்றும் அதன் தலைவரான சுதிப்தோ சென்னுக்கு எதிராக சந்தேகத்திற்குரிய பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.