ஏற்கனவே விலைவாசி பிரச்சனையால் நம் அவதிப்படுகிறோம், இன்னும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட தயாராகுங்கள். ஏனென்றால் ரூபாயின் மதிப்பு குறைவதால் பெட்ரோல், டீசல், உணவு, தங்கம் ஏன் கடன் வாங்குவதில் கூட விலை உயர்வு ஏற்படும். ரூபாயின் மதிப்பு இது வரை இல்லாத அளவிற்கு 1 அமெரிக்க டாலருக்கு 58.96 இந்திய ரூபாயை தொட்டுள்ளது!!. இந்த மாற்றம் நம்மை எப்படி பாதிக்கப் போகிறது என்று பார்க்கலாமா?
எரிபொருள்கள்
நாம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், இறக்குமதி செய்யும் செலவு அதிகரிக்கும். ஏனென்றால் சிறிது வாரத்திற்கு முன்பு வரை கூட 1 டாலருக்கு 54 ரூபாய் கட்டிக்கொண்டு வந்த நம் நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள், இப்போது 58.50 ரூபாய் கட்ட வேண்டும். அதனால் இதற்கு முன் செய்ததை போலவே பெட்ரோல் விலையை வெகுவாக கூட்டலாம்.
உணவு பொருள்கள்
எரிபொருளின் விலை கூடுவதால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதனால் உணவு பொருட்களின் விலையும் கூடும். இது பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உணவு மற்றும் சில்லறை துறையை பாதிக்கும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10% குறைந்தால் விலைவாசி 0.60% அதிகரிக்கும்!!.
வங்கிகள்
விலைவாசி உயருவதால், ரிசர்வ் வங்கி கண்டிப்பான முறையில் வட்டி விகித அளவை கூட்டி விடும். வீட்டுக்கடன் மற்றும் இதரக் கடன் வாங்க திட்டம் வைத்திருந்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.
தங்கம்
நாம் தங்கத்தை இறக்குமதி செய்வதால், டாலருக்கு நிகரான இந்திய பணத்தை அதிகமாக கொடுக்க நேரிடும். இதனால் உள்ளூரில் தங்கத்தின் விலையும் கூடிடும்.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்தால், வட்டி விகிதம் கூடி வளர்ச்சியை குறைக்கும். இதற்கு காரணம் வட்டி விகிதம் கூடும் போது முதலீடு குறைந்து விடும். முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும் சேமிப்பையும் இது பாதிக்கும்.


Click it and Unblock the Notifications