தேசிய பங்குச்சந்தை நான்கே நாட்களில் 400 பங்கு குறியீட்டு புள்ளிகளும் மேல் சரிந்தது. கடந்த சில நாட்களில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. ரூபாயின் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளே இந்த சரிவிற்கு காரணமாக அமைந்தன. ஜூலை 23 ல் 6,088 புள்ளிகளுடன் முடிவடைந்த தேசிய பங்குச்சந்தை, ஆகஸ்ட் 2 ல் 5677 புள்ளிகளுக்குச் சரிந்தது.
வங்கி, FMCG, அடிப்படை கட்டமைப்புத்துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. HDFC போன்ற பெரும் வங்கிகளும் தப்பவில்லை. ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமையில் FMCG துறைப் பங்குகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சின. தகவல் தொழில்நுட்பம், மருத்துவ துறை பங்குகள் மட்டுமே வெந்த புண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தன.
இப்போதைய கேள்வி சந்தையின் கதி அடுத்து என்னவாகும்?
இந்திய சந்தையின் ஆதாரம் பலவீனமாகவே இருக்கிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிக் பற்றாக்குறை கவலை அளிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியும், பணவீக்கமும் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.
அதிகமான விலை ஆதாய விகிதாச்சாரத்தின் விளைவாக இந்திய பங்குகளின் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இது போதாதென்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக வங்கிகளும் சேமிப்பு கணக்குக்கான வட்டியை அதிகரித்து விட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளின் விளைவாக சந்தை மேலும் சரிய வாய்ப்புகள் உள்ளன.
இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சரியும் ரூபாய் மதிப்பை தடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பலன் அளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. அந்நிய முதலீட்டுக்கு திறக்கும் கதவு நீண்ட காலத் திட்டமே ஆகும். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில், ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சியைத் தொட்டுவிட்டது.
கூட்டிக்கழித்து பார்க்கும்போது, சந்தை மேலும் சரிவது நிதர்சனமான உண்மை. அமைச்சர்களின் "பொருளாதாரச் சீர்திருத்தம்" என்ற தொலைக்காட்சித் பேட்டிகள் வெட்டி வேலையாகவே தோன்றுகின்றன. இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் "பொருளாதாரச் சீர்திருத்தம்" மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு இருந்தால், ஒருவேளை சரிவு ஏற்படாமல் இருந்திருக்கும். இன்றைய நிலைமையில் பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவனங்கள் குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே போதும் என்ற நினைப்புதான் மேலெழும்புகிறது.