மும்பை: தங்க வைப்பு நிதி திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கான சான்றிதழ்களை மின் ஆவண (Demat Form) வடிவத்தில் மட்டுமில்லாது நேரடிச் சான்றிதழ்கள் (Physical Form) வழங்க பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு கடந்த வாரம் பங்குச்சந்தை கண்காணிப்பு வாரியமான செபி அனுமதி அளித்துள்ளது.
இதுவரை ,பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு மின்னணு வடிவங்களில் மட்டுமே தங்க வைப்பு சான்றிதழ்கள் தருவதற்கு அனுமதிக்கப்பட்டது.
செபி அனுமதி
"தங்க வைப்பு நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கான சான்றிதழ்களை மின் ஆவண (Demat Form) வடிவம் மற்றும் நேரடிச் சான்றிதழ்கள் மூலம் வழங்கலாம்" என பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI) வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
பத்திர முதலீட்டாளர்கள்
பத்திர முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும், பத்திரச் சந்தையின் மேம்பாடு மற்றும் பத்திரச் சந்தையை நெறிப்படுத்தவும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக செபி கூறியுள்ளது.
தங்க வைப்பு நிதி திட்டம்
இந்த நிதியாண்டின் துவக்கத்தில் பரஸ்பர நிதியின் ஊடாக தங்கத்தின் மீது முதலீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியை வங்கிகளில் தங்க வைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இத்திட்டம் தங்கத்தை வீணாக்காமல், உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
புதிய விதிமுறைகள்
தங்க வைப்பு திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பீட்டின் 20 விழுக்காட்டிற்கு மேலாக பரஸ்பர நிதியின் ஊடாக தங்கத்தின் மீது முதலீடு செய்யமுடியாது. மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யுமுன் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகக் குழுமம் மற்றும் அறங்காவலர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாங்கும் வண்ணம் விதிமுறைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.