மும்பை: பெண்களுக்கென்று தபால் நிலையம் பெண்களுக்கென்று தனி காவல் நிலையம் அமைத்ததை தொடர்ந்து மத்திய அரசு பெண்களுக்கென்று தனி வங்கியையும் அமைத்து விட்டது. மத்திய அரசின் முயற்சியில் பெண்களுக்கான வங்கி கடந்த செவ்வாய் கிழமை அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திறப்பு விழாவில் நிதி அமைச்சர் பேசியபோது "பிற அனைத்து வணிக வங்கிகள் போலவே பாரதிய பெண்கள் வங்கியும் விரைவில் நாடு முழுவதும் தன் கிளைகளை பரப்பி உலகளாவிய வங்கியாக செயல்படும்." என மிக உறுதியுடன் தெரிவித்தார்.
பாரத பெண்கள் வங்கி
மேலும் அவர் பாரத பெண்கள் வங்கி பெண்களுக்கான நிதி தேவைக்கு உரிய முறையில் உதவி செய்யும் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலமும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் முதல் நிகர சொத்து மதிப்புடைய தனி நபர்கள் வரை சேவை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகெங்கும் கிளைகள்
இந்தியா முழுவதும் இதன் கிளைகள் நிறுவப்படும் என்றும் வருங்காலத்தில் வெளி நாடுகளிலும் கூட கிளைகள் பரப்ப வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
26 சதவீதம் மட்டுமே
இந்தியாவில் 26 சதவீத பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்துள்ளனர், அது மட்டுமின்றி ஆண்களை விட பெண்களுக்கான கடன் வசதி 80 சதவீதம் குறைவாக உள்ளது. ஆகவே சில பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருப்பதால், அவர்களுக்கு மட்டுமே கடன் வசதி கிடைக்கும் நிலை இங்கு உள்ளது, இதனை போக்க பெண்களை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் பெண்கள் வங்கி அவசியமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
சென்னையிலும் இவ்வங்கி
திரு.சிதம்பரம், இன்று விதைத்துள்ள விதை மரமாக வளர்ந்து பூக்க ஆரம்பிக்கும் போது நாட்டின் ஜனத்தொகையில் 50 சதவீதம் மக்கள் நிச்சயம் பலன் அடைந்து இருப்பர், மும்பையில் நரிமன் பகுதியில் திறந்து வைக்க பட்ட இந்த பெண்கள் வங்கி, இந்தியா முழுவதும் ஆறு கிளைகள் கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், லக்னோ, பெங்களூர், மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வருகிறது. மேலும் இரண்டு கிளைகள் டெல்லி மற்றும் இந்தூரில் மாநில சட்டசபை தேர்தல் பணிகள் முடிவடைந்த பின் டிசம்பர் மாத இறுதியில் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
770 வங்கி கிளைகள்
இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் தலா ஒரு கிளை வீதமாக 28 கிளைகள் நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாகவும், வரும் வருடங்களில் வங்கி கட்டமைப்புகளை விரிவுபடுத்தி 2020ல் 770 வங்கிகள் நகர்ப்புற பகுதிகள், கிராமப்புற பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பரப்பப்படும் என்றும் கூறினார்.
இலட்சிய வணிக திட்டம்
பாரத பெண்கள் வங்கி 2020ல் ரூ.60,000 கோடி மொத்த வணிகம் எட்ட வேண்டும் என்று ஒரு இலட்சிய வணிக திட்டம் வரையறுக்க பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications