மும்பை: மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் ஒரு கூட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. மலேசியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, இந்தியாவின் டாட்டா குழுமம் மற்றும் அருண் பாடியாவின் கூட்டு வர்த்தக நிறுவனம் தான் இந்த ஏர் ஏசியா இந்தியா. இந்நிறுவனம் வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது விமான சேவைகளை இயக்க அனுமதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் அந்நிறுவனம் பணிகளை துவங்க திட்டமிட்டிருந்த போதும், தன் விமானிகளை மலேசியாவில் பயிற்சிக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டிருந்ததால், அவர்கள் பயிற்சிபெறும் பயிற்சிக்கூடங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக (DGCA) அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் திரு அருண் மிஸ்ரா தெரிவித்தார்.
முன்னதாக ஏர் ஏசியா கடந்த செப்டம்பர் மாதம் விமானங்களை இயக்க அனுமதி கோரியிருந்தது. எனினும், DGCA அந்நிறுவனத்தின் சேவைக்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தது.
முதற்கட்டமாக அந்நிறுவனம் மூன்று ஏர் பஸ் ஏ-380 விமானங்களையும், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் களப்பணியானர்கள் உட்பட 200 பணியாளர்களையும் கொண்டு பணிகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.