மும்பை: நம் நாட்டில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு அனைத்து வழிகளையும், விதிமுறைகளும் சில மாதங்களுக்கும் முன்பு தளர்த்தியுள்ளது. பிற நாட்டவர் இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், பணமதிப்பு, வர்த்தகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சி அடையும் என மத்திய அரசு நம்புவதால் இத்தகைய சட்ட சீர்திருத்ததம் செய்திருக்கிறது.
திங்களன்று நடந்த கூட்டத்தில் மத்திய அரசு சுமார் ரூ.821.63 கோடி அளவு மதிப்புள்ள 12 அந்நிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளித்ததுள்ளது. இதில் ஸ்வீடிஷ் நாட்டின் மிகப்பெரிய ஃபேஷன் நிறுவனமான ஹென்னேஷ் & மொரிட்ஸ் (H&M) நிறுவனத்திற்கான அனுமதியும் அடங்கும்.
"நவம்பர் 13 , 2013 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ( FIPB) பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு, மத்திய அரசு ரூ.821.63 கோடி மதிப்புள்ள 12 பன்னாட்டு நேரடி முதலீட்டு (FDI) திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது" என நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
வோடபோன் நிறுவனம்
வோடபோன் நிறுவனம் தனது இந்தியக் கிளையின் பங்கு விகிதத்தை தற்போதுள்ள 64.38 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது கைவிட்டுள்ளது.
ரூ.10,141 கோடி முதலீட்டுத் திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் மொரீசியசிஸ் நாட்டில் இருந்து செயல்படும் மறைமுக கிளையான, இந்தியா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் 10,141 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டம் பற்றிய முடிவு டிசம்பர் 6 ம் தேதி நடைபெற உள்ள வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது .
ஹோல்சிம் நிறுவனத்தின் அனமதி கிடப்பில்
சுவிஸ் நாட்டு கட்டுமானப்பொருள் பெருநிறுவனமான ஹோல்சிமின் (Holcim) முதலீட்டு திட்டம் தொடர்பான முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
H&M நிறுவனம்
ரூ.720 கோடி மதிப்பிலான முதலீட்டில் நாடு முழுவதும் கடைகள் திறக்க H&M நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. H&M நிறுவனம் இந்தியாவில் கிளை நிறுவனம் அமைத்து ஒற்றை அடையாள (Single Brand) விற்பனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. பேஷன் துறையில் உலகளாவிய அளவில் சில்லறை வர்த்தகம் மேற்கொண்டுள்ள H&M நிறுவனம், 53 நாட்டு சந்தைகள் முழுவதும் பரவி, 3,000 கடைகளைக் கொண்டுள்ளது.
ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள்
பே கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (மொரிஷியஸ்), வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட், ஹவ்கோ பெட்ரோபெர் (மும்பை), ஜாபிர் ஹசன் சவுத்ரி மற்றும் தஸ்னீம் அகமது (வங்காளம்), கிரீன் டெஸ்டிநேசன் ஹோல்டிங்ஸ் (மொரிஷியஸ்) உட்பட்ட நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
கிடப்பில் இருக்கும் நிறுவனங்கள்
கெட்கோ ஆசியா பிரைவேட் லிமிடெட் சிங்கப்பூர், பி5 ஆசியா ஹோல்டிங் இன்வெஸ்ட்மென்ட் ( மொரிஷியஸ் ) லிமிடெட் உட்பட நான்கு நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் பற்றிய முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட நிறுவனங்கள்
மேலும் வெரிட்டாஸ் (இந்தியா) லிமிடெட், ஆஸ்டன்பில்ட் ரினிவப்லஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட நான்கு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது என்று அமைச்சரகம் தெரிவித்துள்ளது .
8.46 பில்லியன் டாலர்
ஏப்ரல்-ஆகஸ்ட் கால கட்டத்தில் இந்தியாவிற்கு பன்னாட்டு நிதி உள்வரவாக 4 சதவிதம் அதிகரித்து சுமார் 8.46 பில்லியனாக டாலர் அளவு எட்டியது.