லண்டன்: இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பிரிட்டனின் பிரபல மின்னுற்பத்தி நிறுவனமான என்பவர் நிறுவனத்திடம் (Npower) இருந்து அதன் மறுகட்டமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக சுமார் 1,000 வேலை வாய்ப்புகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
ஜெர்மனியின் ஆர்டபுள்யுஇ (RWE) நிறுவனத்தின் பிரிட்டன் அங்கமான என்பவர் நிறுவனம் தன் வசம் உள்ள பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மற்றும் அலுவலகப் பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கான முதன்மை பிரதிநிதியாக பிரிட்டன் நிறுவனமான காபிடா வாடிக்கையாளர் சேவை மற்றும் இதர அலுவலகப் பணிகளை பிப்ரவரி மாதத்திலிருந்து வழங்கத் துவங்கும். சுமார் 120 மில்லியன் பவுண்டுகள் பெறுமானமும் 7 வருட காலமும் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் சுமார் 540 என்பவர் ஊழியர்கள் காபிடா நிறுவனத்திற்கு மாற்றப்படுவர்.
இதன் மூலம் பிரிட்டனில் 1,460 பணியிடங்கள் குறைக்கப்படுவதோடு இந்த வேலைகளை இந்தியாவிற்கு அளிக்கும் நோக்கம், அலுவல் நேரங்களில் பணி நெருக்கடியை குறைப்பதாகும்.
"முன்னணி சேவை வழங்கும் நிறுவனங்களை அழைத்ததன் மூலம் வாடிக்கையாளர் சேவையை எவ்வாறு உயர்த்தவேண்டும் என்பதற்கான தொலைநோக்குத் திட்டத்தினை வகுத்துள்ளோம்" என என்பவர் நிறுவன தலைமை நிர்வாகி பால் மஸ்ஸாரா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்த மறுகட்டமைப்பு வாடிக்கையாளர் விரும்பும் அளவிற்கு சேவையை தர அவசியமானது. எனினும், அனைத்து அழைப்புகளும் பிரிட்டனிலேய பெறப்படும். நெருக்கடியான நேரங்களில் அழைப்பு காத்திருப்பு நேரங்களை குறைத்தல் மற்றும் அழைப்பு கட்டணங்களை குறைத்தல் போன்ற விஷயங்களில் எங்களுக்கு இது எளிதாக உள்ளது" என்றார்.
என்பவர் நிறுவனம் ஆறு பெரும் பிரிட்டன் மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு கடந்த அக்டோபர் மாதத்தில் 10.4% விழுக்காடு அளவிற்கு மதிப்பு உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மறு கட்டமைப்பு நடவடிக்கைகளின் விளைவு மத்திய பிரிட்டனிலுள்ள அந்நிறுவனத்தின் ஸ்டாக்-ஆன்-ட்ரென்ட் -இல் உள்ள அலுவலகங்கள் மூடப்பட்டு சுமார் 550 ஊழியர்கள் பாதிக்கப்படும்போது உணரப்படும்.
"இது சில ஊழியர்களுக்கு மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். மேலும் அடுத்து வரும் மாதங்களில் அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக நாங்கள் இருப்போம்" என மஸ்ஸாரா கூறினார்.
ஊழியர்கள் சங்கமான யுனிசன், நிர்வாகத்தின் இந்த முடிவு நிறுவனத்திற்கே பாதகமாக அமையும் என தெரிவித்துள்ளது. "இந்த செலவு குறைப்பு நடவடிக்கைகள் நிறுவனத்திற்கு பாதகமாகவே அமையும். அவர்கள் ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ ஆதரவாக இருந்ததில்லை. மேலும் பணியாளர்களை நியமிக்காமலும் தொழில் நுட்பத்தில் அல்லது வாடிக்கையாளர் சேவையில் எந்த ஒரு முதலீடும் செய்ய முன்வரவில்லை" என அச்சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஆர்டபுள்யுஇ மற்றும் என்-பவர் நிறுவனம் தற்போது சுமார் 11,000 பணியாட்களை கொண்டு பிரிட்டன் நாடு முழுவதும் இயங்குகிறது. இதில் 9,500 பேர் சில்லறை வர்த்தகத்தில் உள்ளனர். அந்நிறுவனம் 2014-16 ஆண்டுகளில் சுமார் 6,750 ஐரோப்பிய பணியிடங்களை குறைக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.