மும்பை: உலகம் முழுவதும் அசைவ உணவு விற்பனையில் முடி சூடா மன்னனாக விளங்குவது சில நிறுவனங்களே, அதில் கேஎஃப்சி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் மக்களை கவர பல முயற்சிகள் எடுத்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் பல நாடுகளில் செயல்படுவதால், அந்நாட்டு சுவைக்கு ஏற்றார் போல தனது மெனுவை மாறி அமைத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சைவ உணவு பிரியர்கள் இருப்பதால் இந்நிறுவனம் தனது கடைகளில் உயர்தர முறையில் சைவ உணவுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இந்நிறுவனம் அனைத்து தரப்பினரையும் தன் கடைகளுக்கு திருப்பியுள்ளது என்றே சொல்லலாம்.
புதிய மெனு
பன்னீர் ஜிங்கர், வெஜ் டிவிஸ்டருடன் இனி கிரிஸ்பர் பர்கர், வெஜ் ஸ்டிரைப்ஸ், வெஜ் ராக்கிங் பர்கர் மற்றும் வெஜ் ரைஸ் பவுல் போன்ற உணவு பொருட்களை சேர்த்துள்ளது. சில மாதங்களில் விற்பனையை கண்காணித்தப் பின்பு மேலும் சில உணவுகளை சேர்க்க கேஎஃப்சி திட்டமிட்டுள்ளது.
புதிய அடைமொழி
கேஎஃப்சி நிறுவனத்தின் அடைமொழி "சோ குட்" (So good..) என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சைவ பிரிவு துவங்கிய பிண்பு இந்த பிரிவிற்கு "சோ வெஜ்... சோ குட்..." (So veg.. So good..) என்று மாறியமைத்துள்ளது.
இந்தியர்கள்
இந்த புதிய மெனு இந்தியாவில் உள்ள சைவ பிரியர்களை கவர சரியான திட்டமாக இருக்கும் என கேஎஃப்சியின் மார்கெட்டிங் பிரிவின் தலைவர் துர்வ் கவுல் தெரிவித்தார்.
உணவு பழக்கம்
உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பின் தகவல் படி இந்தியாவில் சுமார் 42 சதவீத மக்கள் சைவ உணவு பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், மேலும் அசைவ உணவு உண்ணும் மக்கள் வருடத்தில் 35% நாட்களில் சைவ உணவை உண்ணவே ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கிறது. இந்த தகவல்கள் படி கேஎஃப் நிறுவனம் இந்தியாவில் சைவ பிரிவை துவங்கியது சரியான முடிவு தான்.
பீட்சா
இந்தியாவில் மெக்டொனால்டு நிறுவனம் தான் முதன் முதலில் சைவ உணவு பிரிவை துவங்கியது. மேலும் ஒரு தகவல் அறிக்கையின் படி இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவீத பீட்சாக்கள் சைவம் என்பது குறிப்பிடதக்கது.