டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு பக்கம் பேசி வந்தாலும், இந்நாட்டு பெண்கள் ஆண்களுக்கு நிகராக ராக்கெட் சயின்ஸ் முதல் கூலி வேலை வரை அனைத்து துறையிலும் சாதித்து வருகினறனர். இந்நிலையில் இந்தியாவில் மொத்த பெண்கள் மக்கள்தொகையில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 12.9 கோடி என்று ஒரு அரசு சர்வே கூறியுள்ளது. இதில் 56.1% பெண்கள் சுயவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் மக்களவையில் அறிவித்தார்.
அரசு கணக்கெடுப்பு
தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் (NSSO) இந்தக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி விஷ்ணு தியோ செவ்வாய்க்கிழமை மக்களவில் பேசினார்.
12.9 கோடி பெண்கள்
2011-12ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் 12.9 கோடி பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். இவர்களில் 12.7% பேர் முழுநேர பணிக்கு (regular job) செல்கின்றனர். 31.2% பெண்களுக்கு எப்போதாவதுதான் வேலை (casual labour) கிடைக்கிறதாம்.
படித்த பெண்கள்
23.9% பட்டப்படிப்பு படித்த பெண்கள் நகர்ப் பகுதிகளிலும், 2.4% பட்டம் படித்த பெண்கள் கிராமப் பகுதிகளிலும் வேலைக்கு செல்கின்றனர். மேலும், ஆரம்பப் பள்ளி முடித்த பெண்களில் 21.8% பேர் கிராமப்புறங்களிலும், 19% பேர் நகர்ப்புறங்களிலும் பணிபுரிகின்றனர்.
படிக்காத பெண்கள்
அதேபோல், படிக்காத பெண்களில் 57% பேர் கிராமப் பகுதிகளிலும், 27.1% பேர் நகர்ப் பகுதிகளிலும் வேலைக்கு செல்கின்றனர்.
சுயவேலையில் 56.1% பெண்கள்
இந்தக் கணக்கெடுப்பில் மற்றொரு சுவரசியமான தகவல் கிடைத்துள்ளது, இந்தியாவில் பல வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் பெண்கள் சுயதொழில் துவங்க அதிகளவில் நிதியுதவி செய்து வருகிறது. இதனை பயன்படுத்தி 56.1% பெண்கள் சுயமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
பயிற்சி நிறுவனங்கள்
வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக, ஐடிஐ மற்றும் தேசிய, மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி நிறுவனங்கள் பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகின்றன. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தேசியப் பயிற்சி நிறுவனம் 25%லிருந்து 30%ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புத் திட்ட செலவுகள்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்காக (PMEGP) கடந்த 2011-12ல் ரூ.1010.23 கோடியும், 2012-13ல் ரூ.1228.44 கோடியும், 2013-14ல் 988.36 கோடியும் செலவழிக்கப்பட்டு உள்ளதாகவும் மக்களவையில் அமைச்சர் கூறினார்.