டெல்லி: 20,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சகாரா குரூப் நிறுவனத்தின் தலைவர் சுபத்ரா ராய் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தொகையை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு செலுத்த தனது சொத்துகளை விற்க ஏதுவாக சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு 31 இலட்சம் ரூபாய் செலவில் ஏ.சி, தொலைபேசி, இண்டர்நெட், விடியோ கான்பரன்சிங், உணவு மற்றும் பாதுகாப்பு போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
எதற்கு இந்த வசதி?
இந்த 20,000 கோடி ஊழல் வழக்கில் ஜாமீன் பெற சுபத்ரா ராய் மற்றும் நிறுவனத்தின் இரு துணை தலைவர்களான அசோக் ராய் சவுதிரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகியோர் 10,000 கோடி ரூபாய் செலுத்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதில் 5,000 கோடி பணமாகவும், 5,000 கோடி ரூபாய் வங்கி உத்திரவாதமாகவும் அளிக்க வேண்டும்.
சொத்துக்கள் விற்பனை
இத்தொகையை செலுத்த இந்நிறுவன சொத்துக்களை விற்கவும், இது குறித்து வாடிக்கையாளர்களிடம் பேசவும் தொலைபேசி, இண்டர்நெட் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது இதற்கு இந்நிறுவனம் சுமார் 31 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாக சிறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
57 நாட்கள்
இத்தகைய வசதிகள் அனைத்தும் வெறும் 57 நாட்களுக்கும் மட்டுமே (ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 30 வரை)வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 57 நாட்களுக்கு 31 இலட்சம் ரூபாய் செலவு.
80% டீல் முடிந்தது..
சொத்துகள் விற்பனையில் 80 சதவீத பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளதாகவும், முற்றிலும் முடிவு பெற மீண்டும் இத்தகைய வசதிகள் வேண்டும் என ராய் தரப்பில் நீதிமன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகப்படுத்த கோரிக்கை
மேலும் ஜெயிலில் தனது உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள அதிகப்படியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.