டெல்லி: நாட்டின் அதிகாரம் மிக்க சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், எஸ்.பி.ஐ. வங்கித் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, முதலிடம் பிடித்துள்ளார்.
வங்கி, நிதித்துறை, ஊடகம் போன்ற முக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பட்டியலை, பிரபல பார்சூன் இந்தியா நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா முதலிடம் பிடித்துள்ளார். தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி வரும் இவரின் நடவடிக்கைகளால், எஸ்.பி.ஐ.,யின் வளர்ச்சி குறிப்பிடத் தக்க அளவு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சாந்தா கோச்சர்
பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளனர்.
சக்திவாய்ந்த பெண்கள்
இந்தியாவில் உயர் பதவியில் உள்ள சக்தி வாய்ந்த 50 பெண்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக 8 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஹெச்பிசிஎல் தலைவர் நிஷி வாசுதேவா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஏஇஸட் பி பார்ட்னர்ஸ் நிறுவன இணை நிர்வாகி ஜியா மோடி, டாஃபே தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசன், கெப்ஜெமினி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அருணா ஜெயந்தி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் பெண்கள்
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரீதா ரெட்டி, பயோகான் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிரண் மஜும்தார், ஹெட்டி மீடியாவின் ஷோபனா பார்தியா ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
36 ஆண்டுகால பணியில்
1977-ம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார். கடந்த 36 வருடங்களாக எஸ்.பி.ஐ.யில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார். மேலும், நியூயார்க்கில் இருக்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையிலும் பணிபுரிந்துள்ளார்.
அருந்ததி பட்டாச்சாரியா
206 வருட எஸ்.பி.ஐ. வரலாற்றில், முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பட்டாச்சார்யா தற்போது சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு முன்பு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.